புதுச்சத்திரம் அருகே இளம்பெண் வெட்டிக்கொலை: கணவர் உட்பட இருவர் கைது
புதுச்சத்திரம் அருகே இளம்பெண் வெட்டிக்கொலை செய்த சம்பவத்தில் கணவர் உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர்.
HIGHLIGHTS
நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் அருகே உள்ள நவணி, பள்ளிப்பட்டி தேவேந்திரர் தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் தமிழ்ச்செல்வன் (25). இவரது மனைவி நந்தினி (23). மனைவியின் நடத்தையில் தமிழ்ச்செல்வனுக்கு சந்தேகம் இருந்து வந்துள்ளது. இது சம்மந்தமாக அடிக்கடி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இந்தநிலையில், சம்பவத்தன்று அதிகாலை நந்தினி ஒருவருடன் போனில் பேசிக்கொண்டு இருந்தார். தனது கள்ளக்காதலனுடன் தான் மனைவி பேசுகிறார் என்று, சந்தேகமடைந்த தமிழ்ச்செல்வன், வீட்டில் இருந்த கொடுவளால் நந்தினியை வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டார்.
இது குறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து மனைவியை கொலை செய்த தமிழ்ச்செல்வன், அவருக்கு உடந்தையாக இருந்த அதே பகுதியைச் சேர்ந்த அவரது நண்பர் அஜித் (23) ஆகிய 2 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர் செய்தனர். கோர்ட் உத்தரவுப்படி 2 பேரும் 15 நாட்கள் ரிமாண்ட் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.