நாமக்கல் நகராட்சி பகுதிகளில் ஜிகா வைரஸ் நோய் தடுப்பு தீவிரம்
நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், ஜிகா வைரஸ் பரவலை தடுக்க, தீவிர சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
HIGHLIGHTS
இது குறித்து நகராட்சி கமிஷனர் பொன்னம்பலம் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் ஜிகா வைரஸ் பரவலை தடுக்க, அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் மூலம், பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது. அவ்வகையில் நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நகராட்சியில் மொத்தம் 39 வார்டுகள் உள்ளன. இவற்றில் நோய்த்தடுப்பு பணிகள் மேற்கொள்வதற்காக, 50 பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஒவ்வொருவருக்கும் தலா 100 வீடுகள் வீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இப்பணியாளர்கள் வார்டுகளுக்கு உட்பட்ட குடியிருப்புகளுக்கு சென்று தண்ணீர் தொட்டிகளில் ஏடிஎஸ் கொசுக்களை அழிக்க, அபேட் மருந்து தெளிக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
பொதுமக்களும் தங்களது குடியிருப்புகளில் பயன்படுத்தாத பொருட்களில் மழைநீர் தேங்கியிருப்பதை அகற்றி , சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். மேலும், அபேட் மருந்து தெளிக்க வரும் பணியாளர்களுக்கும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று, அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.