நாமக்கல்லில் குடிநீருடன் சாக்கடை கலப்பு: பொதுமக்கள் போராட்டம்
நாமக்கல் நகராட்சி 13வது வார்டு பகுதியில் குடிநீருடன் சாக்கடை நீர் கலந்து வருவதைக் கண்டித்து, பொதுமக்கள் ரோட்டில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
HIGHLIGHTS
நாமக்கல் நகராட்சி 13-வது வார்டுக்குட்பட்ட பகுதியில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இதில் 10-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு நகரட்சி குடிநீர் இணைப்பில், குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதாக அப்பகுதி பொதுமக்கள் நகராட்சி அதிகாரிகளிடம் பல முறை புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள் நேற்று காலிக்குடங்களுடன் வீதியின் நடுவில் அமர்ந்து திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்ததும் அங்கு வந்த போலீசார் அவர்களுன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். சாக்கடை கழிவுநீர் வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு இருப்பதால், அதில் தேங்கும் கழிவுநீர் குடிநீர் குழாயில் உள்ள உடைப்பு வழியாக புகுந்து விடுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.
மேலும் சாக்கடையை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். அதற்கு போலீசார் நகராட்சி அதிகாரிகளிடம் கூறி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதன்பேரில் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.