ஷவர்மா சாப்பிட்ட பள்ளி மாணவி உயிரிழப்பு: ஓட்டல் உரிமையாளர் கைது
நாமக்கல் ஷவர்மா சாப்பிட்ட பள்ளி மாணவி உயிரிழந்தது தொடர்பாக ஓட்டல் உரிமையாளர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
HIGHLIGHTS

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.
நாமக்கல் தனியார் ஓட்டலில் ஷவர்மா சாப்பிட்டு, உடல்நலம் பாதிக்கப்பட்டதால், தனியார் ஆஸ்பதிரியில் சிகிச்சை பெற்று வருபவர்களை, மாவட்ட கலெக்டர் உமா பார்வையிட்டு நலம் விசாரித்தார்.
நாமக்கல் நகரில் தனியார் உணவகத்தில் ஷவர்மா சாப்பிட்ட 14வயது பள்ளி சிறுமி பரிதாபமாக உயரிழந்ததை தொடர்ந்து, உணவக உரிமையாளர் உட்பட 3 பேரை கைது செய்யவும், நாமக்கல் பகுதியில் உள்ள ஓட்டல்களில் ஷவர்மா, கிரில் சிக்கன் மற்றும் தந்தூரி சிக்கன் தயாரித்து விற்பனை செய்வதற்கு தடை விதித்தும் கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
மருத்துவக்கல்லூரி மாணவர்கள்
நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், இரண்டாம் ஆண்டு படித்து வரும் மாணவி ஒருவருக்கு, கடந்த, 16ம் தேதி பிறந்த நாள். இதையொட்டி அவரும் அவரது நண்பர்கள் உள்ளிட்ட 13 பேரும், நாமக்கல்–பரமத்தி ரோட்டில் உள்ள தனியார் உணவகத்தில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்டுள்ளனர்.
அடுத்த நாள் அவர்களில் 11 பேருக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டு, நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்து, தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பாக, நாமக்கல் கலெக்டர் சம்பந்தப்பட்ட ஓட்டலில் ஆய்வு செய்தபோது, இறைச்சி உணவு தரம் குறைவாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து அந்த ஓட்டலுக்கு சீல் வைக்கப்பட்டது.
பள்ளி மாணவி உயிரிழப்பு
இதற்கிடையில் நாமக்கல் ஏ.எஸ்.பேட்டையைச் சேர்ந்த, சுஜாதா (38). மகள் கலையரசி, (14), நாமக்கல் கோட்டை நகராட்சி உயர்நிலைப்பள்ளியில், 9ம் வகுப்பும், மகன் பூபதி (12) ஆறாம் வகுப்பு படித்து வந்தனர். இவர்கள் மூவரும் மேற்கண்ட ஐவின்ஸ் என்ற ஓட்டலில், சிக்கன் ஷவர்மா பார்சல் வாங்கிச் சென்று, வீட்டில் சாப்பிட்டுள்ளனர். சாப்பிட்ட சிறிது நேரத்தில் வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. அதையடுத்து, நாமக்கல்லில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இந்நிலையில், இன்று அதிகாலை 5 மணிக்கு பள்ளி மாணவி கலையரசி படுத்த படுக்கையிலேயே, பரிதாபமாக உயிரிழந்தார். தொடர்ந்து, மாணவியின் தாயார் சுஜாதா, தம்பி பூபதி ஆகியோர் நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
43 பேர் ஆஸ்பத்திரிகளில் அனுமதி
அதேபோல், ஐவின்ஸ் ஓட்டலில் ஷவர்மா மற்றும் சிக்கன் உணவுகள் சாப்பிட்ட, நாமக்கல் கொண்டிசெட்டிப்பட்டியை சேர்ந்த அஜெய் (29), தமிழ்செல்வன் (25), நாமக்கல் ஆண்டவர் நகரை சேர்ந்த திலகவதி (39), சிந்துஜா (36), அஜித்தர்சன் (14) ஆகிய 3 பேரும் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை அந்த ஓட்டலில் சாப்பிட்ட 43 பேர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு, அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகிளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கலெக்டர் பேட்டி
சிகிச்சை பெற்று வருபவர்களை நாமக்கல் கலெக்டர் உமா, எம்.எல்.ஏ. ராமலிங்கம், அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் சாந்தா அருள்மொழி, நகராட்சித் தலைவர் கலாநிதி ஆகியோர் நேரில் பார்வையிட்டு நலம் விசாரித்தனர்.
பின்னர் நாமக்கல் கலெக்டர் உமா நிருபர்களிடம் கூறியதாவது:
நாமக்கல் நகரில் பரமத்தி ரோட்டில் உள்ள, ஐவின்ஸ் என்ற தனியார்உணவகத்தில் சாப்பிட்டவர்களுக்கு, வாந்தி, பேதி இருப்பதாக தகவல் வந்தது. குறிப்பாக, நாமக்கல் 11 அரசு மருத்துவ கல்லூரி மாணவர்களும், எம்.பி.பி.எஸ். இரண்டாம் ஆண்டு பட்டதாரிகள். அனைவரும், அன்றைய இரவு, ஷவர்மா, பிரைடு ரைஸ், நான், தந்தூரி சிக்கன் உள்ளிட்ட உணவுகள் சாப்பிட்டுள்னர். அடுத்த நாள் அதிகாலையில் அவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு, உயர் மருத்துவர் அடங்கிய குழு அமைக்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது காய்ச்சல் குறைந்துள்ளது.
இந்த நிலையில் அதே உணவகத்தில் சாப்பிட்ட, 14 வயது பள்ளிக்குழந்தை இன்று காலை இறந்துவிட்டதாக தகவல் வந்தது. விசாரணையில், அவருடன் உறவினர்களும் அன்று இரவு, ஐவின்ஸ் உணவகத்தில் இருந்து பார்சல் வாங்கி சென்று வீட்டில் சாப்பிட்டது தெரியவந்தது. அவர்கள் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த தனியார் ஓட்டலில் ஒரே நாளில் சாப்பிட்ட, 43 பேர் உள்நோயாளியாக இருக்கின்றனர். நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், 21 பேர் பெரியவர்கள், 3 பேர் குழந்தைகள். தனியார் மருத்துவமனைகளில், 19 பேர் என, மொத்தம் 43 பேர் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் கர்ப்பிணி அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது, அவர்களின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஓட்டல் உரிமையாளர் உட்பட 3 பேர் கைது
இது குறித்து நாமக்கல் மாவட்ட போலீஸ் எஸ்.பி. ராஜேஷ்கண்ணன் கூறியதாவது:
ஓட்டலில் ஷவர்மா சாப்பிட்டு, இறந்துபோன சிறுமியின் உறவினர்கள் அளித்த புகாரின் பேரில், நாமக்கல் சிலுவம்பட்டியை சேர்ந்த, ஐவின்ஸ் ஓட்டல் உரிமையாளர் நவீன்குமார் (26), ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சமையலர்கள் சஞ்சய் மகாகுர், தபாஷ்குமார் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது, ஜாமீனில் வெளியே வரமுடியாதபடிகடுமையான பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில், கோர்ட்டில் குறைந்த பட்சம் அவர்களுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.