தலைமலை வனப்பகுதியில் வழி தெரியாமல் தவித்த பக்தர்கள் 7 பேர் மீட்பு
Thalamalai Forest -தலைமலை வனப்பகுதியில் வழி தெரியாமல் தவித்த பக்தர்கள் 7 பேர் மீட்பு குழுவினர் பத்திரமாக மீட்டு அனுப்பி வைத்தனர்.
HIGHLIGHTS
Thalamalai Forest -தலைமலை சஞ்சீவிராய பெருமாள் கோயிலுக்கு வந்த கரூர் மாவட்டம் குளித்தலையைச் சேர்ந்த தந்தை, மகள் உள்ளிட்ட 7 பேர் வழி தெரியாமல், வனப்பகுதியில் நுழைந்து தவித்தனர். அவர்களை நள்ளிரவு 1 மணியளவில் மீட்புக் குழுவினர் பத்திரமாக மீட்டு வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே 3500 அடி உயரத்தில் உள்ள தலைமலையில் பிரசித்தி பெற்ற சஞ்சீவிராய பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் நாமக்கல், திருச்சி மாவட்ட எல்லையில் அமைந்துள்ளதால் இரு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வருவது வழக்கம். தற்போது புரட்டாசி மாதம் என்பதால் வழக்கத்திற்கு மாறாக கோயிலுக்கு அதிக அளவில் பக்தர்கள் வந்து செல்கின்றனர். கோயிலுக்கு வருவற்கு நாமக்கல், திருச்சி மாவட்டத்தில் 4 வழித்தடங்கள் உள்ளன. இந்நிலையில் கரூர் மாவட்டம் குளித்தலை சேதுரத்தினம் பிள்ளை தெருவைச் சேர்ந்த உதயகுமார் (65), அவரது மகள் வனிதா (35), மருமகள் சுகன்யா (31) மற்றும் ஸ்வேதா (18), வாசுகி (25), பிரகதீஸ்வரன் (10), மவுலீஸ்வரன் (8) உள்ளிட்ட 7 பேர் மீலியாம்பட்டி என்ற பகுதியில் உள்ள வழித்தடத்தில் மலையில் உள்ள கோயிலுக்கு சென்றனர்.
வழிபாடு முடித்த பின்னர் தலைமலையில் இருந்து கீழே இறங்கியுள்ளனர். அப்போது இரவு 7 மணியானதால் வழி தெரியாமல் வனப்பகுதியினுள் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு சென்றுள்ளனர். எனினும், கீழே செல்லும் பாதை தெரியாமல் வனப்பகுதியினுள் நுழைந்துவிட்டதை உதயகுமார் குடும்பத்தினர் உணர்ந்துள்ளனர். பின்னர், உதயகுமார் தனது செல்போன் மூலம் திருச்சி மாவட்டம் தொட்டியம் போலீஸ் நிலையத்தை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து வனத்துறை மற்றும் நாமக்கல், திருச்சி மாவட்ட காவல் துறையினர், கோயில் அறங்காவலர் குழுவினர் ஆகியோர் அப்பகுதி இளைஞர்கள் உதவியுடன் மலைக்கு செல்லும் 5 வழித்தடங்களிலும் தனித்தனி குழுக்களாக பிரிந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். வாட்ஸ் அப் லொக்கேஷன் மூலம் அவர்களை தேடினார்கள்.
நள்ளிரவு 1 மணியளவில் எருமப்பட்டி வழித்தடத்தில் 7 பேரும் இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து அனைவரையும் பத்திரமாக மீட்ட மீட்புக் குழுவினர், அவர்களை மலை அடிவாரத்திற்கு அழைத்து வந்து தயாராக இருந்த மருத்துவர்கள் மூலம் முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின், அனைவருக்கும் உணவு வழங்கி வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். தலைமலைப்பகுதி வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதால், கோயிலுக்கு செல்லும் வழி கரடு முரடாக உள்ளது. மேலும் தெரு விளக்குகள் அமைக்கப்படாததால், இரவு நேரங்களில் பக்தர்கள் வழி தெரியாமல் வனப்பகுதிக்குள் நுழைந்து விடுகின்றனர். எனவே அங்கு தெரு விளக்குகள் அமைக்க வனத்துறை உடனடியாக அனுமதி அளிக்க வேண்டும் என்று பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2