மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய ராஜேஷ்குமார் எம்.பி
மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை எம்.பி. ராஜேஷ்குமார் வழங்கினார்.
HIGHLIGHTS
நாமக்கல் மாவட்ட ஆட்சியர், அலுவலகத்தில், ராஜ்யசபா எம்.பி. ராஜேஷ்குமார், தனது தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் மூலம், 33 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.17.97 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், ராஜ்சயபா எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம், தலா ரூ.94,167வீதம், 18 மாற்றுத்திறனாளிகளக்கு மொத்தம் ரூ.16.95 லட்சம் மதிப்பில், இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள் மற்றும் தலா ரூ6,800 வீதம் 15 பேருக்கு ரூ. 1.02 லட்சம் மதிப்பில் மடக்கு சக்கர நாற்காலி என மொத்தம் 33 மாற்றுத்திறனாளிகளுக்கு, ரூ.17.97 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கிட ராஜ்யசபா எம்.பி ராஜேஷ்குமார் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.
இதையொட்டி மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர், அலுவலகத்தில் நடைபெற்றது. ஆட்சியர் உமா நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். லோக்சபா எம்.பி. சின்ராஜ், நாமக்கல் எம்.எல்.ஏ. ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ராஜ்யசபா எம்.பி ராஜேஷ்குமார் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தொடர்ந்து, முதலமைச்சரின் விரிவான மருத்துவ இன்சூரன்ஸ் திட்டம் மற்றும் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்ட ஆண்டு விழாவையொட்டி, மருத்துவ இன்சூரன்ஸ் திட்டத்தின் மூலம் பயனடைந்த 5 பேருக்கு எம்.பி ராஜேஷ்குமார் பரிசுகளை வழங்கினார். மேலும், 10 பயனாளிகளுக்கு மருத்துவ இன்சூரன்ஸ் திட்ட அடையாள அட்டைகளை அவர் வழங்கினார். மேலும், அரசு மருத்துவ இன்சூரன்ஸ் திட்டங்கள் மூலம் பயனாளிகளுக்கு சிறப்பான சிகிச்சை அளித்த 2 அரசு மருத்துவமனைகள் , 2 தனியார் மருத்துவமனைகளின் டாக்டர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களைப் பாராட்டி சான்றிதழ் மற்றும் கேடயங்களை எம்.பி ராஜேஷ்குமார் வழங்கினார்.
இந்தநிகழ்ச்சியில் நாமக்கல் நகராட்சித் தலைவர் கலாநிதி, துணைத் தலைவர் பூபதி, மாவட்ட வருவாய் அலுவலர் சுமன், சமூக பாதுகாப்பு திட்ட சப்-கலெக்டர் பிரபாகரன், அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் சாந்தா அருள்மொழி, மருத்துவப் பணிகள் இணை இயக்குனர் ராஜ்மோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.