தனியார் இன்சூரன்ஸ் நிறுவனம் ரூ. 52 லட்சம் இழப்பீடு வழங்க நுகர்வோர் கோர்ட் உத்தரவு
இழப்பீடு வழங்க மறுத்த இன்சூரன்ஸ் நிறுவனம் ரூ. 52 லட்சம் இழப்பீட்டை வழங்க வேண்டும் என நாமக்கல் நுகர்வோர் கோர்ட்டில் தீர்ப்பளிக்கப்பட்டது.
HIGHLIGHTS

பைல் படம்.
நாமக்கல், நல்லிபாளைத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி, இவர் கடந்த 2021ம் ஆண்டு ஜனவரி 17ம் தேதி தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில், ரூ. 50 லட்சத்திற்கு இன்சூரன்ஸ் பாலிசி எடுத்துள்ளார். அவர் பாலிசி எடுத்த 10 நாட்களில் குளியல் அறையில்தவறி விழுந்து, படுகாயமடைந்தார். சுய நினைவை இழந்த நிலையில் அவர் நாமக்கல்லிலும், கோவையிலும் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். அப்போது ஆஸ்பத்திரியில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்து விட்டார்.
பாலிசி எடுத்த, தனது கணவர் இறந்துவிட்டதால், அவருக்குசேர வேண்டிய இழப்பீட்டு தொகை ரூ. 50 லட்சத்தை தமக்கு வழங்குமாறு இன்சூரன்ஸ் கம்பெனிக்கு அவரது மனைவி சிவகாமி விண்ணப்பம் செய்துள்ளார். பெரியசாமிக்கு விபத்து ஏற்பட்டவுடன், ஆஸ்பத்திரியில் சேர்க்கும்போது போலீசில் புகார் கொடுக்க வேண்டும் என்று ஆஸ்பத்திரி நிர்வாகம் கூறியதால், எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், பெரியசாமி தற்கொலை செய்துகொண்டதாகவும் இன்சூரன்ஸ் நிறுவனம் முடிவு செய்து, இழப்பீட்டுத் தொகை வழங்க முடியாது என மறுத்துவிட்டது.
போலீஸ் விசாரணை முடிவில், கோர்ட்டில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்துபோது, இறந்து போன பெரியசாமியின் மரணம் இயற்கையானது என்று தெரிவித்துள்ளதாலும், தடயவியல் துறையில் இறந்து போனவரின் வயிற்றில் இருந்த உணவுப் பொருட்களில் விஷம் அல்லது ரசாயனம் கலந்த எதுவும் இல்லை என தெரிவித்துள்ளதாலும், அரசு டாக்டர், திடீரென ஏற்பட்ட மாரடைப்புதான் இறப்பிற்கு காரணம் என்று தெரிவித்துள்ளதாலும் பெரியசாமியின் இறப்பு இயற்கையானது என நுகர்வோர் கோர்ட் விசாரணை முடிவில் தெரிவித்துள்ளது.
இன்சூரன்ஸ் நிறுவனம் பெரியசாமி பெரியசாமி தற்கொலை செய்து கொண்டார் என்பதற்கான எவ்வித ஆவனத்தையும் கோர்ட்டில் தாக்கல் செய்யவில்லை. எனவே இன்சூரன்ஸ் நிறுவனம் பெரியசாமியின் பாலிசி தொகை ரூபாய் 50 லட்சம் மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் சேவை குறைபாட்டால் ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் சிரமங்களுக்கு இழப்பீடு ரூ. 2 லட்சம் என மொத்தம் ரூ. 52 லட்சத்தை 4 வார காலத்திற்குள் அவரது மனைவிக்கு வழங்க வேண்டும் என நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டு உறுப்பினர் ரத்தினசாமி முன்னிலையில், நீதிபதி டாக்டர் ராமராஜ் அளித்த தீர்ப்பில் கூறியுள்ளார்.