நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தூய்மை பணியாளர்கள் தர்ணா
நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தூய்மை பணியாளர்கள் திடீர் தர்ணா போராட்டம் நடத்தினார்கள்.
HIGHLIGHTS
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், தூய்மை பணியாளர்கள் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.
நாமக்கல், மோகனூர் ரோட்டில் அமைந்துள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், ஒப்பந்த அடிப்படையில், தூய்மை பணியாளர்கள், காவலர்கள், உதவியாளர்கள் என, 100க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று மருத்துவமனை கண்காணிப்பாளர் அறை முன், தரையில் அமர்ந்து, தூய்மைப் பணியாளர்கள், திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தூய்மை பணியாளர்களுக்கு, ஒப்பந்த அடிப்படையில் அறிவிக்கப்பட்ட மாத சம்பளம் முறையாக வழங்க வேண்டும், தூய்மைப்பணியாளர்கள் வளர்மதி, நிர்மலா, பூங்கொடி, சுதா ஆகிய, 4 பேரை, பழிவாங்கும் நோக்கில், சம்பந்தப்பட்ட கான்ட்ராக்ட் நிறுவனம் சஸ்பெண்ட் செய்துள்ளது. அவர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்ககைகளை வலியுறுத்தியும், தூய்மைப்பணியாளர்களின் சம்பளத்தில், முறைகேடு செய்பவர்களை கண்டித்தும் இந்த தர்ணா போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.
சம்பவ இடத்துக்கு வந்த, நாமக்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரபாண்டியன், தூய்மைப் பணியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில், உடன்பாடு ஏற்படாததால், கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து, தூய்மை பணியாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தூய்மை பணியாளர்களின் தர்ணா போராட்டத்தால், நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தூய்மைப் பணிகளின் இந்த திடீர் போராட்டத்தினால் மருத்துவ மனை வளாகத்தில் துப்புரவு பணிகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக மருத்துவமனையில் உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருபவர்கள் அவதி அடைந்தனர்.