எருமப்பட்டி அருகே சுவரில் துளையிட்டு அடகு கடையில் நகை, பணம் கொள்ளை
எருமப்பட்டி அருகே அடகுக்கடை சுவற்றில் துளையிட்டு நுழைந்த கொள்ளையர்கள் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.
HIGHLIGHTS
நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளது, பவித்திரம் கிராமம். இங்கு அதே பகுதியை சேர்ந்த பாலாஜி என்பவர் கடந்த சில ஆண்டுகளாக வருடங்களாக நகை அடகு கடை நடத்தி வருகிறார். 7ம் தேதி சனிக்கிழமை அவர் அவசர வேலையாக வெளியூர் சென்று விட்டார். அன்று இரவு வழக்கம் போல் கடையை அதன் மேனேஜர் பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.
அடுத்தநாள் ஞாயிற்றுக்கிழமை காலை அடகு கடையின் மேல்கூரை துளையிட்டு இருப்பதை வாட்ச்மேன் பார்த்துள்ளார். இது குறித்து கடையின் உரிமையாளர் பாலாஜிக்கும், எருமப்பட்டி போலீசாருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், அடகு கடைக்குள் சென்று பார்த்தபோது, அங்கிருந்த லாக்கர் உடைக்கப்பட்டு, அதில் இருந்த சுமார் 13 சவரன் எடையுள்ள தங்க நகைகள் மற்றும் ரூ. 1.20 லட்சம் ரொக்கம் கொள்ளை அடிக்கப்பட்டது தெரியவந்தது. நகை அடகு கடையின் மேல்கூரை சுவரை துளையிட்டு, உள்ளே நுழைந்து, நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக எருமப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட எஸ்.பி சாய் சரண் தேஜஸ்வி தெரிவித்துள்ளார்.