நாமக்கல் மாவட்டத்தில் காலை உணவுத் திட்டத்தில் 41,129 மாணவர்கள் பயன்
நாமக்கல் மாவட்டத்தில், காலை உணவுத்திட்டத்தின் கீழ், 41,129 மாணவர்கள் பயன் பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
HIGHLIGHTS
தமிழக, சட்டசபையில் 110 விதியின் கீழ், அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு, அனைத்து வேலை நாட்களிலும் இலவச காலை உணவு வழங்கப்படும் என்று கடந்த 15.9.2022 அன்று தமிழக முதல்வர் அறிவித்தார்.
இதையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் முதற்கட்டமாக 70 பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்ட செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு பட்ஜெட்டில், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு தொடக்கப்பள்ளிகளிலும், 1 முதல் 5 வரை பயிலும் மாணவர்களுக்கு முதலமைச்சரின், காலை உணவுத் திட்டத்தை விரிவுபடுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இதையொட்டி, இன்று, நாகை மாவட்டம், திருக்குவளை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் முதல்வர் ஸ்டாலின் காலை உணவுத்திட்டத்தை தொடக்கி வைத்தார்.
இதைத் தொடர்ந்து, நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் ஊராட்சி ஒன்றியம், முத்துக்காளிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழக வனத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன், மாவட்ட ஆட்சியர் உமா, ராஜ்யசபா எம்.பி. ராஜேஷ்குமார் ஆகியோர் முதலமைச்சரின் விரிவாக்கப்பட்ட காலை உணவு திட்டத்தை துவக்கி வைத்து, பள்ளிக்குழந்தைகளுடன் அமர்ந்து உணவருந்தினார்கள்.
முதலமைச்சரின் காலை உணவு திட்டம் , நாமக்கல் மாவட்டத்தில் 772 பள்ளிகளில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ் 15 ஊராட்சி ஒன்றியங்களில் 714 பள்ளிகளில் உள்ள 28,716 குழந்தைகளும், 15 டவுன் பஞ்சாயத்துக்களில் 59 பள்ளிகளில் உள்ள 3,751 குழந்தைகளும், 5 நகராட்சிகள் மற்றும் 4 டவுன் பஞ்சாயத்துக்களில் 69 பள்ளிகளில் உள்ள 8,662 குழந்தைகளும் பயன் பெறுவார்கள். மொத்தம் மாவட்டத்தில் உள்ள 842 தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பயிலும் 41,129 மாணவ மாணவிகள் காலை உணவுத் திட்டத்தில் பயன்பெறுவார்கள்.
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்திற்கென அனுமதி வழங்கப்பட்டுள்ள உணவு வகைகளை தயாரிப்பதற்கு தேர்வு செய்யப்பட்ட மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு, சமையற்கலை திறன் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கான 2 நாள் பயிற்சியில், 13 வகையான உணவு வகைகள் தயாரிப்பதற்கான பயிற்சி மற்றும் சுகாதாரமான உணவு மற்றும் பாதுகாப்பான சமையல் வழிமுறைகளை பின்பற்றி சமைப்பது தொடர்பாக உணவுப் பாதுகாப்பு அலுவலரால் பயிற்சியும் வழங்கப்பட்டுள்ளது என நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவக்குமார், மகளிர் திட்ட இயக்குநர் (மகளிர் பிரியா, முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, ராசிபுரம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் ஜெகநாதன், முத்துக்காளிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் அருள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தனம், மேகலா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.