108 ஆம்புலன்ஸ் சேவையை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும் -பணியாளர்கள் சங்கம் கோரிக்கை
108 ஆம்புலன்ஸ் சேவையை தமிழக அரசே ஏற்று நடத்தக்கோரி பணியாளர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
HIGHLIGHTS
108 ஆம்புலன்ஸ் சேவையை தமிழக அரசே ஏற்று நடத்தக்கோரி பணியாளர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நாமக்கல் மாவட்ட,108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் சங்க கலந்தாய்வு கூட்டம் வீடியோ கான்பரன்சிங்மூலம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் கார்த்திகேயன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் திருநாவுக்கரசு முன்னிலை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் ராஜேந்திரன் தீர்மானங்கள் குறித்து விளக்கி பேசினார். கூட்டத்தில் நிறைவேற்றபட்ட தீர்மானங்கள்:
ö கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் முன்களப் பணியாளர்களாக பணியாற்றிக் கொண்டிருக்கும் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களின் பாதுகாப்புக்காக நிர்வாகத்தினர் சரியான நடவடிக்கை எடுப்பதில்லை. இதனால், கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அதிகமான தொழிலாளர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் 6 தொழிலாளர்கள் கெரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். நிர்வாகத்தின் சார்பில் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகள் கடைபிடிக்கப்படுவதில்லை. தொழிலாளர்களுக்கு கவச உடைகள், மாஸ்க், கையுறை, சானிடைசர் போன்றவை வழங்கப்படுவதில்லை. 108 ஆம்புலன்ஸ் வாகனங்களை கிருமிநாசினி மூலம் முறையாக தூய்மைப்படுத்தாததால் தொழிலாளர்களும், பொதுமக்களும் நோய்தொற்றுக்கு ஆளாக நேரிடுகிறது. எனவே தொழிலாளர்கள், பொதுமக்களுக்கு முறையான இலவச மருத்துவ அவசர சேவை தடையின்றி விரைவாக கிடைத்திடவும், தொழிலாளர்களின் நலனை உறுதி செய்யவும் 108 ஆம்புலன்ஸ் சேவையை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.