இந்தியாவிலிருந்து நாள்தோறும் 10 லட்சம் முட்டைகள் இறக்குமதி: இலங்கை அதிகாரி தகவல்
இலங்கையின் தேவைக்காக, இந்தியாவில் இருந்து தினசரி 10 லட்சம் முட்டைகளை இறக்குமதி செய்ய உள்ளது.
HIGHLIGHTS

பைல் படம்
கடும் நெருக்கடியில் உள்ள இலங்கையில் பொதுமக்களின் தேவைக்காக இந்தியாவில் இருந்த தினசரி 10 லட்சம் முட்டைகள் இறக்குமதி செய்ய அந்த நாடு திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் உள்ள 2 கோழிப்பண்ணைகளில் இருந்து முதற்கட்டமாக 2 கோடி முட்டைகள் இறக்குமதி செய்யப்பட்டு, அதில் 1 கோடி முட்டைகள் வெளி மார்க்கெட்டில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள 5 கோழிப்பண்ணைகளில் இருந்து தினசரி 10 லட்சம் முட்டைகள் இறக்குமதி செய்ய உள்ளதாக, இலங்கை ஸ்டேட் டிரேடிங் கார்ப்பரேசன் (எஸ்டிசி) சேர்மன் அசின் வலிசுந்தரா செய்தி ஏஜென்சிக்கு கூறியுள்ளார். இலங்கையில் உள்ள கால்நடை உற்பத்தி துறை மற்றும் எஸ்டிசி அதிகாரிகள் இந்தியா சென்று மொத்தம் 5 கோழிப்பண்ணைகளை நேரில் பார்வையிட்டு, முட்டையின் தரத்தை ஆய்வு செய்த பின்னர் இறக்குமதிக்கு அனுமதி அளித்துள்ளனர்.
இலங்கையின் தேவைக்கேற்ப மேலும் முட்டைகள் இறக்குமதி செய்யப்படும் என்று அவர் கூறியுள்ளார். இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள், இலங்கையில் உள்ள பெரிய பேக்கரிகள், பிஸ்கட் உற்பத்தியாளர்கள், சமையல் காண்ட்ராக்டர்கள் மற்றும் ஹோட்டல்களுக்கு, ஒரு முட்டை விலை ரூ.35 (இலங்கை எஸ்எல்ஆர்) விலைக்கு விநியோகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் கடந்த ஒரு ஆண்டாக பெரும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. பணவீக்கத்தால் பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்து பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் முதல் இலங்கை பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வர போராடி வருவது குறிப்பிடத்தக்கது.