'குளு குளு' கொல்லி மலைக்கு ஒரு விசிட் அடிக்கலாமா?
namakkal news, namakkal news today-நாமக்கல் மாவட்டத்தில் மனதை கொள்ளை கொள்ளும் அழகும், மனதை சில்லிட வைக்கும் குளுமையும் நிறைந்த சுற்றுலாத்தலம் கொல்லிமலை. சுற்றுலா பயணிகள் மிஸ் பண்ணக்கூடாத முக்கியமான இடமுங்க இது...
HIGHLIGHTS
தமிழகத்தில் த்ரில் அனுபவம் மிக்க மலைப்பாதையைக் கொண்டது கொல்லிமலை. பல வளைவு நெளிவுகள் கொண்ட ஏற்ற இறக்கங்கள், 70 கொண்டை ஊசி வளைவுகள் என நீண்டு செல்லும் அந்த அழகிய சாலை. அதில் அமைந்திருக்கும் 'செம்மேடு' என்ற ஊர் கொல்லிமலையின் 'சென்டர் பாயின்ட்' ஆக இருக்கும். இந்த மலைக்கு சீஸன் டைம் என்ற ஒன்றே இல்லை. எப்போது வேண்டுமானாலும் போகலாம்.
கொல்லிமலை எழில் கொஞ்சும் அழகு இடங்களை பார்ப்போம்
அரப்பளீஸ்வரர் கோவில்
கொல்லி மலையில், சிறப்பு வாய்ந்த அரப்பளீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் தமிழ் வள்ளல்களில் ஒருவராக போற்றப்படும் வல்வில் ஓரியால் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்த கோவிலில் சிவபெருமான் மூலவராக காட்சியளிக்கிறார். ராசிபுரத்தில் உள்ள சிவன் கோவிலுக்கு, அரப்பளீஸ்வரர் கோவிலில் இருந்து சுரங்கப்பாதை ஒன்று அந்தக் காலத்தில் கட்டியதாகச் கதை சொல்லப்படுவதுண்டு.
ஆகாய கங்கை அருவி
அரப்பளீஸ்வரர் கோவிலை ஒட்டியே அமைந்திருக்கிறது அற்புதம் நிறைந்த இந்த ஆகாய கங்கை அருவி. இந்த அருவியை அடைய ஏறத்தாழ 1,000 படிகளுக்கு மேல், கீழிறங்க வேண்டும். கீழிருந்து பார்க்கையில், ஏதோ ஆகாயத்தில் இருந்து அருவி கொட்டுவது போல தோன்றும்.
இதனாலேயே இதற்கு 'ஆகாய கங்கை' என்று பெயர் வந்ததாக சொல்கின்றனர். 140 அடி உயரத்தில் இருந்து அரிய மூலிகைகள் கொண்ட கொல்லி மலையில் உற்பத்தியாகி சில்லென்று கொட்டும் இந்த அருவியில் குளித்தால் நோய்கள் நீங்கும் என்று நம்பப்டுகிறது. இதில் குளித்தால் மனதும், உடலும் புத்துணர்ச்சி அடையும்.
வியூ பாயின்ட்
சீக்குப்பாறை வியூபாயிண்ட், சேலூர் நாடு வியூபாயிண்ட், சிறுமலை வியூபாயிண்ட் ஆகிய இடங்களில் மலை காட்சிகளை கண்டு ரசிக்க வியூ பாயிண்ட்டுகள் உருவாக்கப்பட்டுள்ளன. மாசிலா அருவியும், சித்தர் குகைகள், சுவாமி பிரவானந்தா ஆசிரமமும் மிஸ் பண்ணாமல் பார்க்க வேண்டிய சுற்றுலா இடங்கள்.
வாசலூர்ப்பட்டி படகு இல்லம்
வாசலூர்ப்பட்டி என்ற இடத்தில் படகு இல்லம் இருக்கிறது. இங்கே போட்டிங் போகலாம். அழகான சின்ன ஏரியில் ஆபத்தே இல்லாமல் ஜாலியாக பயணிக்கலாம், இதற்கான கட்டணமும் குறைவுதான். கொல்லிமலை, வாழவந்தி நாடு, அரியூர், வளப்பூர், தின்னனூர், குண்டூர், சேளூர், தேவனூர், ஆலந்தூர், குண்டுனி, திருப்புலி, எடநாடு என 16 நாடுகளைக் கொண்ட கொல்லிமலையில், 20,000க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
விளை பொருட்கள்
தினை, கேழ்வரகு, வரகு என பல்வேறு சிறுதானியங்கள் கொல்லிமலையில் பயிரிடப்படுகின்றன. இந்த மலைக் கிராமங்களில் நெல்லும் கூட பயிரிடப்படுகிறது. இது தவிர அன்னாசிப்பழம், பலா, வாழை, மரவள்ளிக்கிழங்கு, ஏலக்காய், மிளகு என வழியெங்கும் விளைவதைக் காணலாம். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் தங்களுக்கு தேவையான மூலிகைகள் மற்றும் சமையலுக்கு தேவையான மிளகு, ஏலக்காய் உள்ளிட்ட பொருட்களை வாங்கி வரலாம்.
வல்வில் ஓரி திருவிழா
ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதத்தில் சுற்றுலாவை ஊக்குவிக்கும் பொருட்டு வல்வில் ஓரி திருவிழா கொல்லிமலையில் இரண்டு நாட்களுக்கு நடத்தப்படுகிறது. நாய் கண்காட்சி, மலர் கண்காட்சி, பாரம்பரிய உணவுத்திருவிழா போன்றவை இங்கே நடத்தப்படுகின்றன.