JKKN கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் யூனியன் சங்க துவக்கவிழா
குமாரபாளையம், JKKN கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் யூனியன் மற்றும் கூட்டணி சங்கங்களின் துவக்கவிழா நடந்தது.
HIGHLIGHTS
குமாரபாளையம், JKKN கலை மற்றும் அறிவியல்கல்லூரியில் 48வது கல்லூரி யூனியன் மற்றும் அதன் கூட்டணி சங்கங்களின் துவக்கவிழா கல்லூரி வளாகத்தில் நடந்தது.
கல்லூரி வளாகத்தில் உள்ள செந்தூராஜா அரங்கில் நடந்த இந்த விழாவை கல்லூரிகளின் தலைவர் ஸ்ரீமதி செந்தாமரை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். மூன்றாம் ஆண்டு ஆங்கில இலக்கிய மாணவியும் மாணவர் பேரவைத் தலைவருமான நிலா விழாவுக்கு வந்திருந்த சிறப்பு விருந்தினர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களை வரவேற்றார்.
தலைமையுரை ஆற்றிய கல்லூரிகளின் தலைவர் ஸ்ரீமதி. செந்தாமரை, 'மாணவப்பருவத்தில் மாணவர்கள் தலைமைப் பண்பை வளர்த்துக்கொள்ளவேண்டும். வளரும் வயதில் அவர்களின் தலைமைப் பொறுப்புகளை உணர்ந்து செயல்பட்டால், அவர்கள் எதிர்காலத்தில் சிறந்த வழிகாட்டிகளாக மாறுவார்கள்.' என்று பேசினார்.பின்னர் கல்லூரிகளின் தலைவர் ஸ்ரீமதி. செந்தாமரை முன்னிலையில் மாணவர் பேரவைச் செயலர் மற்றும் துணைத் தலைவர்கள் உறுதிமொழி ஏற்றனர்.
ஜேகேகேஎன் கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் ஓம் சரவணா வாழ்த்துரை வழங்கினார். அவர் பேசும்போது, 'மாணவர்கள், வெறும் ஏட்டுக்கல்வியை மட்டுமே கற்பதால் அறிவுத்திறனை வளர்த்துக்கொள்ள முடியாது. தனித்திறன்களை வளர்த்துக்கொள்ளவேண்டும். தனித்திறன் பெற்றவர்களே தனித்த அடையாளம் பெறுவார்கள். அவர்களே சாதனை புரிபவர்களாக விளங்குவார்கள். அவர்களே இந்த சமுதாயத்திற்கு ஒரு சிறந்த பங்களிப்பை வழங்கமுடியும். மாணவர்கள் தலைமைப்பண்புகளை வளர்த்துக்கொள்வதோடு தொழில் நுட்பவளர்ச்சிக்கு ஏற்ப தங்கள் அறிவினை மேம்படுத்திக் கொள்ளவேண்டும்.' என்று வாழ்த்தினார்.
விழா முடிவில், மூன்றாம் ஆண்டு கணினி அறிவியல் மாணவி அருளரசி நன்றி கூறினார். இவ்விழாவில் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) முனைவர். சீரங்கநாயகி(பேரவையின் இணைத்தலைவர்), கணினித்துறை இணை பேராசிரியர் கீதா மற்றும் துறைத் தலைவர்கள், பேரவைச் செயலர்கள் கலந்து கொண்டனர். நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவுற்றது.