தெரு நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை செய்யும் பணி தொடக்கம்
குமாரபாளையத்தில் கருத்தடை அறுவைச் சிகிச்சைக்காக தெரு நாய்களைப் பிடிக்கும் பணிகள் தொடங்கியது
HIGHLIGHTS
குமாரபாளையத்தில் நாய்கள் பிடிக்கும் பணிகள் தொடங்கியது.
இது குறித்து நகராட்சி சுகாதாரத் துறை அலுவலர் ராமமூர்த்தி கூறியதாவது:குமாரபாளையம் நகரத்தில் தெரு நாய்கள் அதிக அளவில் சுற்றி திரிவதாகவும் அதனால் நடந்து செல்பவர்கள், குழந்தைகள் மற்றும் வாகன ஓட்டிகளை கடிப்பதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுவதாகவும் சுற்றித் திரியும் தெரு நாய்களை பிடிக்க வேண்டும் என நகர மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் நகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்தனர்.
இதன்பின்னர். சேர்மன் விஜய்கண்ணன் முயற்சியின் பேரில் நகர மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, அரசின் சட்ட விதிகளுக்கு உட்பட்டு தெருவில் சுற்றி திரியும் நாய்களுக்கு வெறி நாய் கடி தடுப்பூசி மற்றும் கருத்தடை அறுவை சிகிச்சை செய்வதற்காக தற்போது நகரத்தில் தெரு நாய்களை பிடிக்கப்பட்டு வருகிறது. மூன்று நாட்கள் பிடிக்கப்பட்ட 110 நாய்களுக்கு விலங்குகள் வதை தடுப்பு பிரிவு எஸ்.ஐ. தர்மராஜ் முன்னிலையில் கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.இவ்வாறு அவர் கூறினார்.
விலங்கு இனவிருத்தி கட்டுப்பாடு (நாய்கள்) விதிகள் உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களுக்கு இணங்க வரையறுக்கப்பட்டுள்ளன.இந்த விதிகளின்படி சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள்/ நகராட்சிகள்/ மாநகராட்சிகள் மற்றும் பஞ்சாயத்துகள் உள்ளிட்டவை, தெரு நாய்களுக்கு கருத்தடை மற்றும் தடுப்பூசி போடுவதற்கான விலங்கு இனவிருத்தி கட்டுப்பாடு திட்டப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். இது போன்ற பணிகளை மேற்கொள்ளும் போது விலங்குகளை வதை செய்யும் பிரச்சனையும் தீர்க்கப்பட வேண்டும்.
இந்த விதிகளை முறையாக அமல்படுத்தி, விலங்கு இனவிருத்தி கட்டுப்பாடு திட்டத்தை உள்ளாட்சி அமைப்புகள் செயல்படுத்தலாம். இதன் மூலம் விலங்குகள் பாதுகாப்பு சம்பந்தமான விஷயங்களில் கவனம் செலுத்தப்பட்டு, தெரு நாய்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறையும்.
விலங்கு இனவிருத்தி கட்டுப்பாடு மற்றும் ரேபிஸ் நோய்த் தடுப்புத் திட்டங்களையும் மாநகராட்சிகள் செயல்படுத்த வேண்டும். தெரு நாய்களை வேறு இடங்களுக்குக் கொண்டு செல்லாமல், மனிதர்களுக்கும், நாய்களுக்கும் இடையே ஏற்படும் பிரச்னையை எவ்வாறு தீர்ப்பது என்பதற்கும் இந்த விதிகளில் வழிமுறைகள் இடம்பெற்றுள்ளன.