பங்குனி அமாவாசை நாளையொட்டி குமாரபாளையம் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
பங்குனி அமாவாசை நாளையொட்டி குமாரபாளையம் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
HIGHLIGHTS
பங்குனி அமாவாசை நாளையொட்டி குமாரபாளையம் கோட்டைமேடு காளியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனை நடைபெற்றது.
இதே போல் சேலம் சாலை, ராஜா வீதி சவுண்டம்மம் கோவில்கள், அம்மன் நகர் எல்லை மாரியம்மன் கோவில், அங்காளம்மன் கோவில்கள், மாரியம்மன் கோவில்கள், திருவள்ளுவர் நகர் மங்களாம்பிகை கோவில், அக்ரஹாரம் காசி விஸ்வேஸ்வரர் கோவில், பட்டத்தரசியம்மன் கோவில், கள்ளிப்பாளையம் மாரியம்மன், காளியம்மன் கோவில், பண்ணாரி மற்றும் சமயபுரம் மாரியம்மன் கோவில்களில் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டன. பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டன.
சித்திரை முதல் நாள் மாலையணிந்து விரமிருந்து ஐயப்பனை காண செல்வது ஐயப்ப பக்தர்கள் வழக்கம். அதன்படி விரதமிருந்து வரும் ஐயப்ப பக்தர்கள் தினசரி காவிரியில் நீராடல், கோவிலில் சுவாமி தரிசனம், விரதம், மாலையில் மீண்டும் நீராடல், பக்தி பஜனையில் பங்கேற்பது, அன்னதானம் வழங்குவது என செயல்பட்டு வருவார்கள். இவர்கள் ஒவ்வொரு குழுவினராக சபரிமலை செல்ல தயாராகி வருகிறார்கள்.
ஐயப்பன் கோவில்களில் தீர்த்தக்குட ஊர்வலங்கள், சிறப்பு அபிஷேகங்கள், மண்டல பூஜைகள், பிரம்மோற்சவங்கள், பள்ளி வேட்டை, அன்னதானம், இருமுடி கட்டுதல் உள்ளிட்ட நிகழ்வுகள் நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இருமுடிக்கு தேவையான பொருட்கள் வாங்க பூஜை சாமான்கள் விற்கும் கடைகளில் ஐயப்ப பக்தர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஒவ்வொரு குழுவினர் அவர்களால் முடிந்த அளவிற்கு சிறிய அளவில் பஜனை வைத்து, தம் பகுதியில் உள்ள மக்களுக்கு அன்னதானம் வழங்கியும் அய்யப்பனை வழிபட்டு வருகின்றனர். வழிபாடு நடத்தப்படும் இடங்களில் தென்னங்குருத்துகளாலும், மலர்களாலும் அலங்கரிக்கப்படுகின்றன.