அக்னி மாரியம்மன் கோவிலில் பூ மிதி திருவிழா
பள்ளிபாளையம் ஆவரங்காடு அருள்மிகு அக்னி மாரியம்மன் கோவில் பூ மிதி திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
HIGHLIGHTS
பள்ளிபாளையம் ஆவரங்காடு அருள்மிகு ஸ்ரீ அக்னி மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற பூ மிதி திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
பள்ளிபாளையம் ஆவரங்காடு பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ஆனந்த விநாயகர், ஸ்ரீ அக்னி மாரியம்மன் திருக்கோவிலில் ஆண்டுதோறும் திருவிழா நடைபெற்று வருகிறது. நிகழ் ஆண்டுக்கான திருவிழா கடந்த மார்ச் 21 செவ்வாய்க்கிழமை அன்று பூச்சாட்டுத்துடன் துவங்கியது.
திருவிழாவின் ஒரு பகுதியாக இன்று குண்டம் இறங்குதல் நிகழ்வை, தலைமை கோவில் பூசாரி முதலவதாக பூ மிதித்து துவக்கி வைத்தார். அதன் பின் ஆயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும் பூ மிதி திருவிழாவில் பங்கேற்றனர். பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் பூ மிதி திருவிழாவில் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
பூ மிதி திருவிழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் பூ மிதி திருவிழாவை ஒட்டி அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு நடைபெற உள்ள திருவிழாவில், அலகு குத்துதல், பூந்தேர் எடுத்தல், அக்னி கரக ஊர்வலம், உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெற உள்ளது. பள்ளிப்பாளையத்தில் நடைபெறும் முக்கிய திருவிழா என்பதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றதால், ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.