குமாரபாளையத்தில் தீரன் சின்னமலை பிறந்தநாள் விழா
குமாரபாளையம் இல்லம் தேடி கல்வி மையத்தில் தீரன் சின்னமலை பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது
HIGHLIGHTS
குமாரபாளையத்தில் தீரன் சின்னமலை பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் புத்தர் தெருவில் நடைபெற்று வரும் இல்லம் தேடி கல்வி மையத்தில் விடியல் ஆரம்பம் சார்பாக சுதந்திர போராட்ட தியாகி தீரன் சின்னமலை பிறந்த தின விழா கொண்டாடப்பட்டது. அவரது உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து . மரியாதை செலுத்தப்பட்டது.
மாணவ, மாணவிகளுக்கு வினாடி, வினா போட்டி வைக்கப்பட்டு, வெற்றி பெற்றவர்கள் அனைவருக்கும். விடியல் பிரகாஷ் பரிசாக புத்தகங்களை வழங்கி, தீரன் சின்னமலையின் தியாக வாழ்க்கை வரலாற்றை மாணவர்களிடையே எடுத்துரைத்தார்.
மாணவர்களிடம் அவர் கூறியதாவது: ஈரோடு மாவட்டம், காங்கேயம் அருகில் மேலப்பாளையம் என்ற சிற்றூரில் ரத்னசாமி கவுண்டர் - பெரியாத்தா தம்பதியருக்கு 17.04.1756 அன்று மகனாகப் பிறந்தார் தீரன் சின்னமலை. இவர் இயற்பெயர் தீர்த்தகிரி ஆகும். தீரன் சின்னமலை இளம் வயதிலேயே போர்க் கலைகளான வாள்பயிற்சி, வில் பயிற்சி, சிலம்பாட்டம், மல்யுத்தம், தடிவரிசை போன்றவற்றைக் கற்றுத் தேர்ந்து இளம் வீரராக உருவெடுத்தார்.
ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டுக் கிடந்த இந்தியாவை மீட்க மைசூர் மன்னன் திப்பு சுல்தான் உடன் இணைந்து செயல்பட்டார். கொங்கு மண்ணில், அன்றைய மைசூர் அரசு வசூலித்த வரியைத் தடுத்து "சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் இடையே ஒரு சின்னமலை" என்று பெயர் பெற்றார்.
மைசூரில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக நடைபெற்ற மூன்று போர்களிலும் திப்பு சுல்தான் - தீரன் சின்னமலை கூட்டணி வெற்றியடைந்ததைக் கண்டு வெகுண்டெழுந்த ஆங்கிலேயர்கள் பல புதிய போர் யுக்திகளைக் கையாளத் திட்டம் தீட்டினார்.பல போர்களில் தோல்வியடைந்த ஆங்கிலேயர்கள் ஆத்திரமடைந்து தீரன் சின்னமலையை சூழ்ச்சி செய்து அவரையும், அவரது சகோதரர்களையும் கைது செய்து சங்ககிரிக் கோட்டையில் 1805 ஆம் ஆண்டு ஜூலை 31 அன்று தூக்கிலிட்டனர். இவ்வாறு அவர் கூறினார். இதில் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர் கார்த்திகா மற்றும் ஆனந்தி கலந்து கொண்டனர்.