மகளிர் உரிமைத்திட்டத்தில் 2.42 லட்சம் விண்ணப்பம் பதிவு: ஆட்சியர் தகவல்
அந்தந்த துறை பணிகள் குறித்து கேட்டறிந்து, பணிகளை துரிதப்படுத்த மாவட்ட ஆட்சியர் உமா அறிவுறித்தினார்.
HIGHLIGHTS
நாமக்கல் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் 2.42 லட்சம் விண்ணப்பம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.
குமாரபாளையம் தாலுக்கா அலுவலகத்தில் அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் தாசில்தார் சண்முகவேல் தலைமையில் நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஆட்சியர் உமா பங்கேற்று, அந்தந்த துறை பணிகள் குறித்து கேட்டறிந்து, பணிகளை துரிதப்படுத்த அறிவுறித்தினார். இதையடுத்து புதிய தாலுக்கா கட்டிடம் கட்டுமான பணியை பார்வையிட்டார். ஆக. 31க்குள் பணிகள் முடித்து, செப். 1ல் அலுவலக திறப்பு விழா நடத்தும் வகையில் பணிகளை துரிதப்படுத்த, பொதுபணித்துறை உதவி பொறியாளர் ஏஞ்சலின் மற்றும் அலுவலர்களிடம் மாவட்ட கலெக்டர் உமா உத்தரவிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் ஆட்சியர் கூறியதாவது: நாமக்கல் மாவட்ட அளவில் நடந்த கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட விண்ணப்பம் வழங்கும் முகாமில் இதுவரை 2.42 லட்சம் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இன்று நடந்த அனைத்து துறை அலுவலர்கள் ஆலோசனை கூட்டத்தில் ஒவ்வொரு துறை பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு, பணிகள் துரிதப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது போல் ஒவ்வொரு தாலுக்கா அலுவலகங்களில் ஆய்வு நடைபெற்று வருகிறது. புதிய தாலுக்கா அலுவலக கட்டுமான பணிகள் ஆக. 31ல் நிறைவடையும் வகையில் பணிகள் துரிதப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
புதிய தாலுக்கா அலுவலக கட்டிடம் அருகே பயணியர் மாளிகை யாரும் பயன்படுத்தப்படாமல் உள்ளதால், அதை தலைமை அஞ்சல் அலுவலகமாக மாற்ற அனுமதி வழங்க வேண்டி, மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் காமராஜ், சித்ரா, மல்லிகா உள்ளிட்ட பலர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தனர். ஓ.ஏ.பி. தாசில்தார் தங்கம், ஆர்.ஐ.க்கள் முருகேசன், கார்த்திகா, வி.ஏ.ஓ. முருகன், செந்தில்குமார், ஜனார்த்தனன் உள்பட பலர் உடனிருந்தனர்.