நாகையில் 15 வயது முதல் 18 வயது சிறுவர்களுக்கு தடுப்பூசி முகாம் தொடக்கம்
நாகை மாவட்டத்தில் உள்ள 15 முதல் 18 வயதுடைய 25,089 பேருக்கு கொரோனா தடுப்பூசி இன்று முதல் செலுத்தப்படுகிறது
HIGHLIGHTS
நாகை இ.ஜி.எஸ்.பிள்ளை கல்லூரியில் ஒரே இடத்தில் 2500க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை நாகை ஆட்சியர் அருண் தம்பு ராஜ் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ் ஆகியோர் தொடங்கி வைத்தனர். மேலும் தடுப்பூசி போடுபவர்களுக்கு பரிசு பொருட்கள் கொடுத்து ஊக்குவித்தனர்.
தமிழக அரசின் உத்தரவை தொடர்ந்து 15 வயது முதல் 18 வயதுள்ள சிறுவர்களுக்கு தடுப்பூசி போடும் முகாம் நாகையில் இன்று தொடங்கப்பட்டது. நாகை இ.ஜி.எஸ்.பிள்ளை கல்லூரியில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமை நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்பு ராஜ் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஷாநவாஸ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
முகாமில் 2500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்று கோவேக்சின் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். முகாமில் தடுப்பூசி செலுத்தியவர்களை ஊக்குவிக்கும் வகையில் டிபன் பாக்ஸ் வழங்கி கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
முன்னதாக நாகை நடராஜன் தமயந்தி மேல்நிலைப் பள்ளியில் கொரோனா தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்த ஆட்சியர், நாகை மாவட்டத்தில் உள்ள 15 முதல் 18 வயதுடைய 25,089 பேருக்கு கொரோனா தடுப்பூசி இன்று முதல் செலுத்தப்படுகிறது என்றும், அனைத்து அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் தொழிற்பயிற்சி நிலையங்களில் தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.