வீட்டிற்கு பாதை கேட்டு நாகப்பட்டிணம் கலெக்டர் அலுவலகம் முன்பு தொழிலாளி குடும்பத்துடன் உண்ணாவிரதம்
வீட்டிற்கு செல்ல பாதை கேட்டு நாகப்பட்டிணம் கலெக்டர் அலுவலகம் முன் தொழிலாளி குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
HIGHLIGHTS
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளுர் தாலுக்கா தேவூர் கிராமத்தை சேர்ந்த தொழிலாளி சுரேஷ் தனது மனைவி அமுதா மற்றுமு தனது 2 குழந்தைகளோடு வசித்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில் உள்ள தேவபுரீஸ்வரர் ஆலயத்துக்கு சொந்தமான இடத்தின் ஒரு பகுதியை அவர்களுடைய வீட்டிற்கு செல்லும் பாதையாக பயன்படுத்தி வந்துள்ளனர். இதனிடையே, அப்பகுதியில் வசிக்கும் ஓய்வு பெற்ற உணவு பாதுகாப்பு அலுவலர் செந்தமிழ்செல்வி மற்றும் அவருடைய உறவினர்கள் பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்து வந்த பொதுபாதையை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் தங்களுடைய வீட்டிற்கு செல்ல முடியாமல் சுரேஷ் குடும்பத்தினர் தவித்து வந்த நிலையில், இதுகுறித்து கீழ்வேளூர் காவல் நிலையம், அறநிலையத்துறை அலுவலகம், ஊராட்சி மன்ற அலுவலகங்களில் பலமுறை புகார் அளித்து வந்துள்ளனர்.
ஆனால், புகார்களின் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லாத நிலையில், செந்தமிழ் செல்வி, இன்று காலை அதே பகுதியில் மக்கள் பயன்படுத்தி வந்த பொதுபாதையை ஆக்கிரமித்து கொட்டகை கட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இதனால் ஆத்திரமடைந்த சுரேஷ் அவருடைய மனைவி மற்றும் 2 குழந்தைகளோடு நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திடீர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். பள்ளி சீருடையோடு குழந்தைகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து காவல்துறை அவர்களிடம் நடத்திய பேச்சு வார்த்தையை அடுத்து, அக்குடும்பத்தினர் நாகை மாவட்ட ஆட்சியரை சந்தித்து முறையிட்டனர். பின்னர் விரைந்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட ஆட்சியர், சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.