மயிலாடுதுறையில் சிகிச்சை பெறும் பீகாரைச் சேர்ந்த முதியவரை மீட்டுச் செல்ல வலியுறுத்தல்
அறக்கட்டளை நிறுவனத்தினர் அவரை மீட்டு செல்ல வேண்டுமென்று உறவினர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்
HIGHLIGHTS
மயிலாடுதுறையில் உடல்நலம் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பீகாரைச் சேர்ந்த முதியவரை மீட்டுச் செல்ல அவரது உறவினர்களுக்கு தொண்டு நிறுவனத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் மயக்கமடைந்து ஆபத்தான நிலையில் கிடந்த முதியவரை கடந்த 10ஆம் தேதி பாரதிமோகன் அறக்கட்டளை நிறுவனத்தினர் மீட்டனர். அவரை தூய்மைப்படுத்தி, உணவு வழங்கி, புதிய உடை அணிவித்து மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சையில் சேர்த்து கண்காணித்து வருகின்றனர். அவர் ஹிந்தி பேசியதால் வடமாநிலத்தவர் என்பது தெரியவந்தது. இஸ்லாமியர் என்றும் பீகார் மாநிலம் மங்கள்பூர் உசனேபாத்தை சேர்ந்த முஹம்மதுஇக்பால் என்றும் தெரியவந்தது. ஒரு வாரமாக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதியவரை கண்காணித்து வரும் பாரதிமோகன் அறக்கட்டளை நிறுவனத்தினர் அவரை மீட்டு செல்ல வேண்டுமென்று உறவினர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.