மாயவரம் ராதா கல்யாண டிரஸ்ட் சார்பில் ஸ்ரீராதா கல்யாண மஹோத்ஸவம்
மயிலாடுதுறை மாவட்டம் மாயவரம் ராதா கல்யாண டிரஸ்ட் சார்பில் ஸ்ரீராதா கல்யாண மஹோத்ஸவம் சிறப்பாக நடந்தது.
HIGHLIGHTS
மயிலாடுதுறையில் மாயவரம் ராதாகல்யாண டிரஸ்ட் சார்பில் 67-ஆம் ஆண்டு ஸ்ரீராதா கல்யாண மஹோத்ஸவம் நடைபெற்றது. விழாவில், பாகவதர்கள் பஜனை பாடல்களை பாட, பக்தர்கள் மனமுருகி பகவானின் திருநாமத்தைச் சொல்லி வழிபாடு செய்தனர். பெண்கள் மங்கல பொருட்களை சீர்வரிசையாக எடுத்துவந்து பகவானுக்கு சமர்ப்பணம் செய்தனர்.
தொடர்ந்து திவ்யநாம பஜனை செய்து, திருமாங்கல்ய தாரணம் செய்யப்பட்டு மஹா தீபாராதனை காட்டப்பட்டது. விழாவில், ஸ்ரீகிருஷ்ணர் ராதா ருக்மிணி சமேதராக கல்யாண கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பஜனை பாடல்களை கலைமாமணி கல்யாணராமன் பாகவதர் உள்ளிட்ட பாகவதர்கள் பாடினர். கலைமாமணி விசாகாஹரி மற்றும் குழுவினரின் சங்கீத உபன்யாசமும் நடைபெற்றது. தொடர்ந்து ஆஞ்சநேயர் உத்ஸவத்துடன் விழா நிறைவு பெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.