மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு பஸ்கள் இயங்காததால் பொதுமக்கள் பாதிப்பு
பொது வேலை நிறுத்தம் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு பஸ்கள் இயங்காததால் பொதுமக்கள் பாதிப்பு அடைந்தனர்.
HIGHLIGHTS
மத்திய அரசை கண்டித்து நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் இன்றும், நாளையும் பொது வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றன. இதில் வங்கி ஊழியர்களும் பங்கேற்கின்றனர். மத்திய அரசு ஊழியர்களுக்கான 18 மாத அகவிலைப்படி நிலுவையை உடனே வழங்க வேண்டும். மத்திய அரசு அலுவலகங்களில் 8.75 லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். பொதுத் துறை வங்கிகளை தனியார்மயமாக்க கூடாது என்பன உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசு ஊழியர்கள் இன்றும், நாளையும் நாடுதழுவிய பொது வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
இதில் மத்திய, மாநில அரசு ஊழியர்களின் அகில இந்திய அமைப்புகள், காப்பீட்டு நிறுவனங்கள், வங்கி உள்ளிட்ட பொதுத் துறை நிறுவனங்களின் தொழிற்சங்கங்கள் பங்கேற்கின்றன. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, சீர்காழி, பொறையாறு அரசு போக்குவரத்து பணிமனையில் 155 பேருந்துகளில் 16 பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. இதனால் வேலைக்கு செல்வோர் மற்றும் கல்லூரி, பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர்.