சோழவந்தான் அருகே திருவேடகம் ஏடகநாதர் ஆலயத்தில் தெப்பத் திருவிழா
சோழவந்தான் அருகே திருவேடகம் ஏடகநாதர் ஆலயத்தில் தெப்பத் திருவிழா மிகவும் விமரிசையாக நடைபெற்றது.
HIGHLIGHTS
சோழவந்தான் அருகே திருவேடகம் ஏழவார் குழலி அம்மன் சமேத ஏடகநாதர் சுவாமி திருக்கோவில் 30 ஆம் ஆண்டு பிரம்ம தீர்த்த தெப்ப திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே திருவேடகம் ஏழவார் குழலி அம்மன் சமேத ஏடகநாத சுவாமி திருக்கோவில் பிரசித்தி பெற்றது. இங்கு ஆண்டுதோறும் தை மாதம் வரும் மகம் நட்சத்திரத்தன்று தெப்பத் திருவிழா விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு செவ்வாய்க்கிழமை சுவாமி மற்றும் அம்பாளை திருக்கோவிலில் இருந்து காலை 10:30 மணிக்கு தெப்பத்திற்கு அழைத்து வரும் நிகழ்வு நடைபெற்றது. தொடர்ந்து, அன்னதானம் நடைபெற்றது.
மாலை சுமார் ஐந்து மணி அளவில் உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜையும் சுவாமி மற்றும் அம்பாளுக்கு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து, இரவு.9 மணி அளவில் ஏழவார் குழலி ஏடகநாத சுவாமி பிரியாவிடையுடன் பக்தர்கள் புடை சூழ அதிர்வேட்டுகள் முழங்க தெப்பம் மற்றும் ஊர் முழுவதும் வலம் வந்து திருக்கோவிலை அடைந்தது. அப்போது ஓம் நமச்சிவாயா என்று பக்தர்கள் மனமுருக பாடி சாமி பின் சென்றனர். தொடர்ந்து தீபாராதனை காட்டப்பட்டு அதில் பங்கேற்ற பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
விழாவில் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை, நிர்வாக அதிகாரி சரவணன், அறங்காவலர் சேவுகன் செட்டியார், விழாக்குழுத் தலைவர் நடராஜன், பொருளாளர் மோகன், ராமச்சந்திரன், முத்தழகு, ஏடக தேவகுமார், மற்றும் திருவேடகம் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.