புதிய வழித்தடங்களில் அரசு பஸ்போக்குவரத்து:அமைச்சர் துவக்கம்
இரண்டு புதிய வழித்தடங்களில் அரசு பஸ் போக்குவரத்தை, அமைச்சர் மூர்த்தி துவக்கி வைத்தார்.
HIGHLIGHTS
மதுரை மாவட்டம், கிழக்கு சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட சத்திரப்பட்டி, கொடிமங்கலம் ஊராட்சிகளில் , மதுரை மண்டல அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, பொதுமக்கள் பயன்பெறும் வகையில் புதிய வழித்தடங்களில் அரசு பஸ்கள், போக்குவரத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
பொதுமக்களின் அத்தியாவசிய அடிப்படை தேவைகளில் ஒன்றாக, சாலைப் போக்குவரத்து உள்ளது. ஏழை, எளிய மக்கள் தங்களது அன்றாட பணிகளுக்கு செல்லவும், மாணவ மாணவியர் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லவும், பொதுப் போக்குவரத்தையே பெரும்பாலும் பயன்படுத்தி வருகின்றனர். பெட்ரோல், டீசல் எரிபொருள் விலை, முன்பைவிட பலமடங்கு அதிகரித்திருப்பதால் பெரும்பாலானவர்கள், அரசு பஸ்களில் பயணிப்பதையே விரும்புகின்றனர். டூவீலர்கள் பயன்பாடு குறைகிறது. இது, விபத்துகளையும் குறைய செய்கிறது. பெண்களுக்கு, நகர பஸ்களில் கட்டணமில்லாத இலவச பயணம் என்பது, பெரிய உதவியாக உள்ளது.
இதனை கருத்தில் கொண்டு, தமிழக அரசு, அரசு நகர பஸ்களில் மகளிருக்கு இலவச பஸ் பயணத் திட்டம் என்ற மகத்தான திட்டத்தை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. இத்திட்டம் பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்நிலையில், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மதுரை கிழக்கு சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட கிழக்கு ஊராட்சி ஒன்றியம், சத்திரப்பட்டி ஊராட்சியில் (அமெரிக்கன் கல்லூரி அருகே) பெரியார் நிலையம் - கடவூர் (சிம்மக்கல் எம்ஜிஆர் பஸ் ஸ்டாண்ட் கடச்சநேந்தல் ஊமச்சிகுளம் வழியாக) மற்றும் கொடிமங்கலம் ஊராட்சியில் பெரியார் நிலையம் – கொடிமங்கலம் (சிம்மக்கல் கோரிப்பாளையம் அய்யர் பங்களா ஊமச்சிகுளம் வழியாக) என, 2 புதிய வழித்தடங்களில் பஸ்கள் போக்குவரத்தை தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து, கொடிமங்கலம் ஊராட்சியில் உள்ள பிருந்தாவன் கார்டன் குடியிருப்பு பகுதியில், ஊரக வளர்ச்சித் துறை சார்பாக ரூ.7.63 லட்சம் மதிப்பீட்டில், புதிய பேவர் பிளாக் சாலை அமைப்பதற்கான பணிகளை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், கலெக்டர் அனீஷ்சேகர், மதுரை மண்டல அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் இளங்கோவன், ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர் வீரராகவன், உட்பட அரசு அலுவலர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
அதிகாரிகள் கவனத்துக்கு:
மதுரை அருகே சோழவந்தான் அரசு போக்குவரத்து பணிமனையில், பழைய பஸ்கள் இயக்கப்பட்டு வருவதால், அடிக்கடி பஸ்கள் பழுதாகி, சாலைகளில் நின்று விடுவதாக, சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். இதனால், பஸ் போக்குவரத்து பாதிப்பதுடன், சோழவந்தானிலிருந்து- மதுரை அண்ணா நிலையத்துக்கும், மதுரை அண்ணா நிலையத்திலிருந்து- சோழவந்தானுக்கும் பஸ்சுக்காக பயணிகள் பலமணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. ஆகவே, மதுரை போக்குவரத்துக் கழக நிர்வாக அதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.