தேர்தலில் திமுக படுதோல்வியை சந்திக்கும் - சரவணன்
வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக பெரிய தோல்வியை சந்திக்கும் என்று அண்மையில் திமுகவிலிருந்து பாஜகவுக்கு சென்ற டாக்டர் சரவணன் கூறினார்.
மதுரையில் அண்மையில் பாஜகவில் இணைந்த டாக்டர் சரவணன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்த பிறகு சமூக நீதி காப்பாற்றப்படும்.திமுகவின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தாலும் அங்கு நான் தனித்துவத்தோடு செயல்பட முடியாத நிலை இருந்தது. சுயமரியாதை குறித்துப் பேசுகின்ற திமுகவில் அது இல்லை என்பது தான் உண்மை.
இதுகுறித்து திமுக தலைமையின் கவனத்திற்கு பலமுறை கொண்டு சென்றேன். விசாரிக்கிறேன் என்று சொன்னார்களே தவிர எதுவும் செய்யவில்லை.வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக மிகபெரிய தோல்வியை சந்திக்கும்.மதுரை வடக்கு தொகுதி நகர்ப்புறம் சார்ந்த பகுதி ஆகும். இங்கு தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக யார் நின்றாலும் வெற்றி பெறுவார்கள். ஆகையால் நிச்சயம் இந்த முறை தாமரை மலரும் என்றார்.