சீருடையை புறக்கணித்து பணியாற்றும் அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள்
மதுரையில் சீருடையை புறக்கணித்து அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் பணியாற்றினார்கள்.
HIGHLIGHTS
மதுரையில் அரசு போக்குவரத்து கழக பணியாளர்கள் சீருடை அணியாமல் பணி புறக்கணிப்பு போராட்டம் நடத்தினார்கள்.
தொழிற்சங்கங்கள் மற்றும் அரசு போக்குவரத்து நிர்வாகம் இடையே செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தின் படி ஆண்டுக்கு இரண்டு சீருடைகள் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு வழங்கப்படவேண்டும். இந்த அடிப்படையில் ஆண்டுக்கு இரண்டு செட் சீருடைகளைஅரசு போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஏப்ரல் மாதம் வழங்க வேண்டும்.
2016 ஆம் ஆண்டு அன்றைய அ.தி.மு.க. அரசின் சார்பில் அன்றைய முதல்வர் ஜெயலலிதா 110 விதியின் கீழ் சட்டமன்றத்தில் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு நான்கு சீருடைகள் வழங்குவதாக அறிவித்தார். அடுத்த ஆண்டு 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் சீருடைகள் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு வழங்கப்படவில்லை. பல கட்ட போராட்டங்களுக்கு பின் 2019 ஆம் ஆண்டு ஒரு செட் சீருடை மட்டுமே வழங்கப்பட்டது. 2020 முதல் 2022 தற்போது வரை போக்குவரத்து தொழிலாளர்களுக்கு சீருடைகள் வழங்கப்படவில்லை. இந்த அடிப்படையில் பல கட்ட போராட்டங்களை போக்குவரத்து தொழிலாளர்கள் நடத்தினர்.
இந்த நிலையில் மதுரை சி.ஐ.டி.யு. அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் கனக சுந்தர் கூறியதாவது:-
போக்குவரத்து தொழிலாளர்கள் சீருடை வழங்க கோரி பலகட்ட போராட்டங்களை நடத்தி வந்த நிலையில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு சீருடை வழங்க கோரி சி.ஐ.டி.யு. அரசு போக்குவரத்து மதுரை தொழிலாளர் சங்கம் சார்பில் போக்குவரத்து நிர்வாகத்திற்கு கடிதம் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 1. 11. 2022 அன்று போக்குவரத்து கழக நிர்வாகத்திற்கு சீருடை வழங்க கோரி நினைவூட்டல் கடிதம் வழங்கப்பட்டது .
அப்போதே 1-12- 2022 முதல் நாங்கள் சீருடை இல்லாமல் கலர் சீருடையில் பணி செய்யப் போவதாக கடிதம் கொடுத்துள்ளோம். அதனைத் தொடர்ந்து போக்குவரத்துக் கழக நிர்வாகம் தமிழக அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும் நிலையில் தொடர்ந்து போக்குவரத்து தொழிலாளர்களுக்கு சீருடை வழங்காததை தொடர்ந்து போக்குவரத்துக் கழக நிர்வாகத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் 1. 12. 2022 முதல் கலர் சீருடைகள் அணிந்து பேருந்துகளை இயக்குவது என்று முடிவு செய்துள்ளது.இன்று கண்டிப்பான முறையில் சீருடை வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் சீருடை அணியாமல் மாற்று உடையில் பேருந்துகளை இயக்கி போராட்டம் நடத்துகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
மதுரையில் 5500 போக்குவரத்து தொழிலாளர்கள் ஓட்டுநர் நடத்துனர் மற்றும் அலுவலர்கள் அதிகாரிகள் என்று பணியாற்றி வருகிறார்கள். இதில் 700 பேர் சீருடை அணியாத பணியாளர்கள் மற்ற அனைவரும் சீருடை பணியாளர்கள். இதில் ஓட்டுநர், நடத்துனர் 2800 பேர் இரண்டு ஷிப்டுகளாக பேருந்துகளை இயக்குகிறார்கள். 700 பேருந்துகளில் ஓட்டுநர் நடத்துனர் என்று முதல் ஷிப்டுகள் 1400 பணியாளர்கள் காலையிலும் மதியம் 1400 ஓட்டுநர் நடத்துனர் என்று பணியாற்றி வருகிறார்கள். 200 பேர் ஒரு சிப்ட் ஓட்டுநர்கள் அவர்கள் காலையில் பேருந்தை இயக்கி மாலையில் பேருந்தை நிறுத்துவார்கள். அந்த அடிப்படையில் மதுரை மாவட்டத்தில் நகரப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.