ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை ஆணைய தலைவர் மதுரையில் ஆய்வு கூட்டம்
ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை ஆணைய தலைவர் மதுரையில் ஆய்வு கூட்டம் நடத்தினார்.
HIGHLIGHTS
தமிழ்நாடு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்தின் சார்பில் மாநில ஆணைய தலைவர் சிவக்குமார் தலைமையில், மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இதில், மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவ பிரசாத் மற்றும் மதுரை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் அதிகாரிகள், அலுவலர்கள், காவல்துறையினர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில், கலந்துகொண்ட பல்வேறு தரப்பினரும் தங்களது கருத்துகளை ஆணையரிடம் தெரிவித்தனர். தொடர்ந்து பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்ட பின்னர், செய்தியாளர்களை சந்தித்து பேசிய மாநில ஆணையத்
தலைவர் சிவக்குமார் பேசும்போது
தமிழகத்தில் பட்டியலிடப்பட்ட சாதி சான்றிதழ் வழங்குவதில் சிக்கல் எதுவும் இல்லை, பட்டியிலிடப்பட்ட பழங்குடியினர் சான்று வழங்குவதில் தான் சிக்கல் உள்ளது. உட்கோட்ட வருவாய்த்துறை அலுவலர்கள் தான் வழங்க வேண்டும், அதற்கு கீழுலுள்ள அதிகாரிகளின் அறிக்கைகளை பெற்றுதான் வழங்கும் நிலை உள்ளது. பழங்குடியினர்களில் பெற்றோர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டிருந்தால் பிள்ளைகளுக்கு சாதி சான்றிதழ் வழங்கலாம் என்பது குறித்து விரைவில் சுற்றறிக்கை அளிக்கவுள்ளோம் என்றார்.
மேலும் ,சாதி சான்றிதழ் வழங்கும் போது சந்தேகம் இருக்கும் பட்சத்தில் விசாரணையால் ஏற்படும் காலதாமத்தை குறைக்க ஆணையம் மாற்று திட்டத்தை அரசுக்கு பரிந்துரைக்கும் எனவும் தெரிவித்தார்.
மனித கழிவுகளை மனிதனே அகற்றுவதை தடுப்பதற்கான தனிச்சட்டத்தின் கீழ் சம்பந்தபட்ட நபர்கள் மீது புகார் அளித்தால், புகார் மீதான நடவடிக்கையை கண்காணிக்க ஆணையத்திற்கு தமிழக அரசு தற்போது அதிகாரம் வழங்கியுள்ளது எனவும், பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காமல் மனித கழிவுகளை அகற்ற கூறும் நபர்கள் மீது நடவடிக்கை மற்றும் இழப்பீடு வாங்கி தர ஆணையம் மூலமாக நடவடிக்கை எடுக்கின்றோம் என்றார்.
தமிழகத்தில், மதுரை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களிலும் தீண்டாமை கடைபிடிக்கும் கிராமங்கள் உள்ளன தீண்டாமையை கடைபிடித்ததால் கடும் நடவடிக்கைகள் எடுத்து உரிய தண்டனை பெற்றுத்தரப்படும் என்றார்.
மத்திய அரசின் திட்டங்கள் தமிழக அரசு குறித்து கருத்துகேட்டால் எங்களது கருத்தை தெரிவிப்போம், ஆணையத்தில் எல்லா பிரச்சனைகளுக்கும் குழுக்கள் அமைத்துகொண்டே போனால், ஒருங்கிணைந்த செயல்பாடு அமையாது எனவும், ஆதி திராவிட மற்றும் பழங்குடியினர் நிதி ஒதுக்கீடு முறையாக பயன்படுத்தாமல் திருப்பி அனுப்புவது குறித்து புகார் வந்துள்ளது இது குறித்த அறிக்கையை அரசுக்கு தெரியப்படுத்துவோம் என்றார்.