/* */

மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டில் மாடு முட்டியதில் வீரர் உயிரிழப்பு, பார்வையாளர் ஒருவரும் பலி

மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டில் மாடு முட்டியதில் வீரர் உயிரிழப்பு, பார்வையாளர் ஒருவரும் பலியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

HIGHLIGHTS

மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டில் மாடு முட்டியதில் வீரர் உயிரிழப்பு, பார்வையாளர் ஒருவரும் பலி
X
ஜல்லிக்கட்டு காளை முட்டியதில் உயிரிழந்த வீரர் அரவிந்த் ராஜன்.

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் பொங்கல் பண்டிகையையொட்டி தற்போது நடந்து வருகின்றன. நேற்று முன்தினம் மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டது. சீறிப்பாய்ந்த காளைகளை கொம்பு முளைக்காத காளையர்கள் அடக்கி தங்களது வீரத்தை வெளிப்படுத்தினார்கள். வீர்களின் பிடியில் சிக்காத காளைகள் திமிழ்களை உயர்த்தி பிடிபடாத மாடுகளாக மைதானத்தில் வலம் வந்தன.

இந்நிலையில் மதுரை மாவட்டம் பாலமேட்டில் ஜல்லிக்கட்டு இன்று காலை தொடங்கி நடைபெற்று வந்தது. ஒவ்வொரு சுற்றிலும் காளையை அடக்குவதில் வீரர்கள் ஆர்வம் காட்டினர். அதுபோலவே பாலமேட்டைச் சேர்ந்த அரவிந்த் ராஜ், காளைகளை போட்டி போட்டுக்கொண்டு அடக்கி வந்தார். ஒரு கட்டத்தில் 9 காளைகளை தழுவி 3ம் இடத்திலிருந்தார்.

இந்த நிலையில் களத்தில் இருந்த ஒரு காளையை தழுவ முயற்சித்தபோது, காளை குத்தியதில் அரவிந்த் ராஜுக்கு வலது பக்க வயிற்றில் பலத்த காயம் ஏற்பட்டது. உயிருக்கு ஆபத்தான நிலையில் உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.

மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அரவிந்த் ராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் பாலமேடு ஜல்லிக்கட்டு நடைபெறும் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை பாலமேட்டில் மாடு முட்டியதில் அதனை அடக்க வந்த வீரர் உயிரிழந்த நிலையில் திருச்சி மாவட்டம் சூரியூரில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியை காண வந்த பார்வையாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதுபற்றிய விவரத்தை பார்ப்போமா?

பொங்கல் திருவிழாவை முன்னிட்டு இன்று திருச்சி மாவட்டம்சூரியூரில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. சூரியூரில் ஒவ்வொரு சுற்றிலும் காளையை அடக்குவதில் வீரர்கள் ஆர்வம் காட்டினர். வீரர்கள் காளையை அடக்குவதையும், காளைகள் வீரர்களை தெறிக்கவிடுவதையும் காண கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பார்வையாளர்கள் கூடியிருந்தனர்.

இந்நிலையில் சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டியை காண புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த அரவிந்த் (25) என்ற இளைஞரும் வந்திருந்தார். பார்வையாளர் பகுதியில் நின்றிருந்த அவரை ஜல்லிக்கட்டு காளை திடீரென முட்டியதில் படுகாயமடைந்தார். உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனாலும், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Updated On: 17 Jan 2023 5:07 AM GMT

Related News