சமூக இடைவெளியுடன் கிராமக் கல்விக்குழு கூட்டம்
கிருஷ்ணகிரி அடுத்த அகசிப்பள்ளியில் சமூக இடைவெளியுடன் கிராமக் கல்விக்குழு கூட்டம் நடந்தது.
HIGHLIGHTS
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி அடுத்த அகசிப்பள்ளியில் சமூக இடைவெளியுடன் கிராமக் கல்விக்குழு கூட்டம் நடந்தது.
கிருஷ்ணகிரி ஒன்றியம் அகசிப்பள்ளி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில், நேற்று கிராமக்கல்விக்குழுக் கூட்டம் சமுக இடைவெளியுடன் நடந்தது. கூட்டத்திற்கு ஓய்வுபெற்ற ஆசிரியர் பரமானந்தம் தலைமை வகித்தார். ஆசிரியர் செந்தில்குமார் வரவேற்புரையாற்றினார்.
இதில், தலைமை ஆசிரியர் தமிழ்செல்வன் பங்கேற்று பேசுகையில்,''பள்ளி வயது குழந்தைகளை பள்ளியில் சேர்க்க வேண்டும். கொரோனா பாதிப்பு காரணமாக மாணவர்கள் பள்ளிக்கு வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது புதிய கல்வி ஆண்டு பிறந்துள்ளது. ஆனால் பள்ளிகள் திறப்பு குறித்து அரசு இன்னும் முடிவுகள் எடுக்கவில்லை. இதற்கிடையில், மாணவர்கள் கல்வி தொலைக்காட்சி மூலம் பாடம் கற்க வேண்டும்,''என்றார்.
வட்டாரக்கல்வி அலுவலர் மரியரோஸ் கூறும் போது,''கல்வி தொலைக்காட்சி சேனலில், வகுப்புகளின் நேரம் குறித்த அட்டவணையை மாணவர்களுக்கு டிஜிட்டல் முறையில் அனுப்பி வைக்க வேண்டும். ஸ்மார்ட்போன் இல்லாத மாணவர்கள் புத்தகம் வாங்க வரும் போது, அவர்களுக்கு கல்வி சேனல் நிகழ்ச்சி அட்டவணை பிரதியை நேரில் வழங்க வேண்டும். மேலும் அனைத்து பள்ளிகளிலும் அட்டவணை விவரத்தை அறிவிப்பு பலகையில் இடம் பெறச் செய்ய வேண்டும். மாணவர்கள் தங்கள் வீட்டிலிருந்த படியே வகுப்புகளை கவனிக்கிறார்களா என்பதை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும்,'' என்றார்.
பெற்றோர் சங்கத் தலைவர் கோவிந்தன் மற்றும் ஊர் மணியகாரர் ஆகியோர், மாணவர்களுக்கு புத்தகமும், கல்வி தொலைக்காட்சி அட்டவனையையும் வழங்கினர். மாணவர்கள் சமுக இடைவெளியுடன் முககவசம் அணிந்து புத்தகங்களை பெற்றுக் கொண்டனர்.ஆசிரியர் அழகுராணி நன்றி கூறினார்.
கிராம கல்விக்குழுக்கூட்டத்தில், ஊர் கவுண்டர் கோவிந்தராஜ், சரவணன் உள்பட பெற்றோர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.