பள்ளி மாணவனை அடித்து உதைத்த ஆசிரியர்: காது ஜவ்வு கிழிந்து மருத்துவமனையில் அனுமதி
கிருஷ்ணகிரியில் பள்ளி மாணவனை ஆசிரியர் அடித்து உதைத்ததால் காது ஜவ்வு கிழிந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
HIGHLIGHTS
கிருஷ்ணகிரி அருகே கள்ளகுறி கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் மகன் முகேஷ். இவர் கிருஷ்ணகிரி ராயக்கோட்டை சாலையில் உள்ள வேளாங்கண்ணி சிபிஎஸ்இ பள்ளியில் 11ம் வகுப்பு கம்ப்யூட்டர் அறிவியல் படித்து வருகிறார்.
இன்று வழக்கம்போல் பள்ளிக்கு வந்த முகேஷ் வகுப்பறையில் பாடத்தை கவனித்து வந்துள்ளார். அப்போது பாடம் நடத்திகொண்டுருந்த ஆங்கில ஆசிரியர் மனோஜ் குமார், மாணவன் முகேஷிடம் சென்று பாடத்தை ஏன் சரியாக கவனிக்கவில்லை என கேட்டு மாணவனை தாக்கி உள்ளார்.
இதில் மாணவன் முகேஷ் காதில் ரத்தம் வழிந்து உள்ளது. இதனை கண்ட ஆசிரியர்கள் மாணவனை உடனடியாக கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.
அங்கு மாணவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மாணவன் காதில் பலத்த காயம் ஏற்பட்டு ஜவ்வு கிழிந்தது உள்ளதாக கூறினர். இதனையடுத்து மாணவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். கல்வி கற்றலுக்கு முக்கியமானது காது வழி கற்றல். தற்போது மாணவனின் காது ஜவ்வு சேதமடையும் வகையில் ஆசிரியர் தாக்கியது மிகவும் வேதனைக்குரிய ஒன்றாகும்.
மாணவர்களை அடிக்கக்கூடாது என்ற நீதிமன்ற உத்தரவையும் மீறி இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதை உயரதிகாரிகள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கொரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வந்த நிலையில், தற்போது பள்ளிகள் திறக்கபட்டதும் மாணவர்கள் மீது ஆசிரியர்கள் தாக்குவது மற்றும் பாலியல் சீண்டல்களில் ஈடுப்படுவது பெற்றோர்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.