கீழ்குப்பம் அருகே கணவன்-மனைவி விஷம் குடித்து தற்கொலை: போலீசார் விசாரணை
கீழ்குப்பம் அருகே குடும்ப பிரச்சனையில் கணவன் மனைவி இரண்டு பேரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
HIGHLIGHTS
கிருஷ்ணகிரி மாவட்டம், பாரூர் அடுத்த கீழ்குப்பம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் இவரது மனைவி சாந்தாமணி இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
இரண்டாவது மகன் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருப்பூரில் பெண் ஒருவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால், முதல் மகனுக்கு யாரும் பெண் கொடுக்க முன் வரவில்லை. இதனால் குடும்பத்தில் பிரச்சனைகள் இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று இரவு கீழ்குப்பம் சுடுகாட்டுப் பகுதியில் உள்ள சமாதியின் மேல் தென்னை மர வேருக்கு வைக்கும் மருந்தை குடித்து கணவன் மனைவி இருவரும் தற்கொலை செய்து கொண்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து இன்று காலை வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போச்சம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த பாரூர் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.