தூயதமிழ்ப் பற்றாளர் பரிசு பெற விண்ணப்பங்கள் வரவேற்பு
அகர முதலி இயக்கத்தின் சார்பில் தூயதமிழ்ப் பற்றாளர் பரிசு பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
HIGHLIGHTS
இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
நடைமுறையில் மக்களிடம் பேச்சு வழக்கிலும், அனைத்து இடங்களிலும் பிறமொழிக் கலப்பில்லாமல் எங்கும், எதிலும் தூயதமிழைப் பயன்படுத்துவோரை ஊக்கப்படுத்தும் வகையில், தமிழ்நாடு அரசு செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்டம் இயக்ககம் வழியாகப் பரிசுத் திட்டத்தை அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் உலகம் முழுவதிலிருந்தும் 3 தூய தமிழ்ப் பற்றாளர்களைத் தேர்வு செய்து, அவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.5 ஆயிரம் பரிசுத்தொகை வழங்கப்படவுள்ளது.
இந்த பரிசுத்தொகையைப் பெறுவதற்கு விருப்பமுள்ள தூய தமிழ்ப் பற்றாளர்கள் அதற்கான விண்ணப்பப் படிவத்தை இணையத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து, அதை நிறைவு செய்து மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது இயக்குநர், செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம், நகர் நிர்வாக அலுவலக வளாகம், முதல் தளம், எண்.75, சாந்தோம் நெடுஞ்சாலை, எம்.ஆர்.சி.நகர், சென்னை-600 028 என்ற முகவரிக்கு வரும் 31ம் தேதி மாலை 5 மணிக்கு கிடைப்பது போல் அனுப்பி வைக்க வேண்டும்.
மேலும், விண்ணப்பிப்பவரின் தூய தமிழ்ப்பற்றை உறுதி செய்து வழங்கும் நற்சான்றிதழ்களையும் இணைத்து அனுப்ப வேண்டும். அத்துடன் நற்சான்று அளிக்கும் தமிழறிஞர்களின் ஒரு பக்க அளவிலான வாழ்க்கைக் குறிப்புகளையும் இணைத்து அனுப்பி வைக்க வேண்டும். இப்போட்டியில் கலந்துகொள்வதற்கு அகவை வரம்போ, கல்வித்தகுதியோ கிடையாது. யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். உரிய சான்றுகளுடன் முழுமையாக நிரப்பப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.