அமராவதி ஆற்றில் மூழ்கி இளைஞரை தேடும் பணியில் தீயணைப்பு படையினர்
அமராவதி ஆற்றில் மூழ்கி மாயமான இளைஞரை தேடும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
HIGHLIGHTS
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பாரதியார் நகர் பகுதியை சேர்ந்தவர் புவனேஷ் (23). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவர் நேற்று மாலை நண்பர்கள் சிலருடன் பெரிய ஆண்டாங்கோவில் பகுதியில் உள்ள அமராவதி ஆற்றின் தடுப்பணை அருகே குளித்துள்ளார்.
மழை காரணமாக தற்போது, கரூர் அமராவதி ஆற்றில் அதிக அளவு தண்ணீர் சென்று வரும் நிலையில், தண்ணீரின் இழுவை திறன் அதிகமாக இருந்து வருகிறது. இதை அறியாத இளைஞர்கள் அஜாக்கிரதையாக குளித்துள்ளனர். இந்தநிலையில், குளித்துக் கொண்டிருந்த இளைஞர் புவனேஷ் திடீரென நீரில் மூழ்கி மாயமாகியுள்ளார்.
இதனால், அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் உடனே கரூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தேடும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் இளைஞரை கண்டுபிடிக்க முடியவில்லை.
இதனையடுத்து வெளிச்சம் குறைந்து இரவான காரணத்தால் தேடும் பணியை தொடர முடியாமல் தீயணைப்பு வீரர்கள் தற்காலிகமாக கைவிட்டனர். இதுகுறித்து கரூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.