கரூரில் குழந்தை பலி: தனியார் மருத்துவமனை முன்பு சடலத்துடன் முற்றுகை
பலியான குழந்தையின் உடலுடன் பெற்றோர்களும் உறவினர்களும் தனியார் மருத்துவமனையினை முற்றுகையிட்டதால் பரபரப்பு.
HIGHLIGHTS
கரூர் அடுத்த வாங்கப்பாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் கீர்த்தி பிரியா - அருண்குமார் தம்பதியினர். இவர்களுக்கு 3 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்த நிலையில் 2வது குழந்தையின் பிரசவத்திற்காக கரூர் மாநகராட்சிக்குட்பட்ட 80 அடி சாலையில் அமைந்துள்ள தனியார் சிறப்பு குழந்தையின்மை மருத்துவமனையில் கடந்த 19 ம் தேதி சிகிச்சைக்காக கீர்த்தி பிரியா சேர்க்கப்பட்டுள்ளார். 20 ஆம் தேதி காலை 11 மணிக்கு அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்துள்ளது.
குழந்தை பிறந்தது முதல் அழுகுரல் கேட்கவில்லை எனவும், சரிவர குழந்தை பால் குடிக்கவில்லை எனவும் கூறப்பட்ட நிலையில், அந்த குழந்தையினை தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்து சிகிச்சை அளித்துள்ளனர். இந்நிலையில், 21 ம் தேதி காலை 11 மணி வரை குழந்தைக்கு மருத்துவர்கள் மூலம் முறையாக எந்தவித சிகிச்சையும் அளிக்கவில்லை எனவும், செவிலியர்கள் மட்டுமே மருத்துவம் பார்த்ததாக கூறப்பட்ட நிலையில் 21 ஆம் தேதி காலை 11 மணிக்கு மருத்துவர் குழந்தையை பார்த்துவிட்டு குழந்தைக்கு மூச்சுத்திணறல் இருப்பதாகவும், மேல் சிகிச்சைக்கு கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.
அதிர்ச்சி அடைந்த அந்த குழந்தையின் உறவினர்கள் குழந்தையை மட்டும் தூக்கிக் கொண்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர். ஆனால், குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் ஆறு மணி நேரத்திற்கு முன்பாக கொண்டு வந்து இருந்தால் குழந்தையை நிச்சயம் காப்பாற்றி இருக்கலாம் எனவும், நேரம் கடந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில் இன்று காலை 11 மணி அளவில் சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தது. குழந்தை இறந்ததற்கு தனியார் மருத்துவமனையின் தவறான சிகிச்சையே காரணம் என்று கூறி குழந்தையின் தாய் கீர்த்தி பிரியா - தந்தை அருண்குமார் உள்ளிட்ட உறவினர்கள் மருத்துவமனை நிர்வாகத்தை கண்டித்து முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த கரூர் சரக துணை காவல் கண்காணிப்பாளர் தேவராஜ் தலைமையிலான போலீஸார் இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சமரசம் நடத்தினர். இரண்டு மணி நேரத்திற்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்கள் பின்னர், உயிரிழந்த குழந்தையின் உடலை எடுத்துக் கொண்டு சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.