கரூரில் 2 பெண் வட்டாரக் கல்வி அலுவலர்கள் உட்பட 4 பேர் சஸ்பெண்ட்
முறைகேடாக பதவி உயர்வு பெற்ற புகாரில், கரூரில் 2 பெண் வட்டாரக் கல்வி அலுவலர்கள் உட்பட 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
HIGHLIGHTS
கரூர் மாவட்டத்தில் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு, கடந்த மாதம் புலியூர் ராணி மெய்யம்மை மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில் தண்டனையில் இருந்த ஆசிரியர் ஒருவருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு, அப்பணியிடத்தை காலியிடமாக காட்டி பணியிடமாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட்டது.
இதனை ஆசிரியர் சங்கங்கள் அப்போது சுட்டிக் காட்டியபோதும், நடவடிக்கை எடுக்காமல், இதுதொடர்பாக புகார்கள் எழுந்த நிலையில், தண்டனையில் உள்ள ஆசிரியருக்கு வழங்கப்பட்ட பதவி உயர்வு திரும்பப் பெறப்பட்டு, வேறு ஒருவருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது.
இதனால், கடவூர் வட்டாரக் கல்வி அலுவலர்கள் (பொறுப்பு) செந்தில்குமாரி, ராஜலட்சுமி மற்றும் கடவூர் வட்டார கல்வி அலுவலக ஊழியர் ஜான்சி, குளித்தலை மாவட்ட கல்வி அலுவலக ஊழியர் குணசேகரன் ஆகிய 4 பேரை கரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மதன் குமார், நேற்று பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.