மோடி பிளக்ஸ் பேனர் கிழிப்பு: பாஜகவினர் சாலை மறியல்
மோடி பிறந்த நாளையொட்டி வைக்கப்பட்ட பிளக்ஸ் பேனர் கிழிக்கப்பட்டதைக் கண்டித்து பாஜகவினர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
HIGHLIGHTS
கரூர் மாவட்ட பாஜக சார்பில் பிரதமர் மோடியின் 71 வது பிறந்தநாளை முன்னிட்டு தளவாபாளையம் பஸ் நிறுத்தம் அருகில் மரக்கன்று வழங்கும் நிகழ்ச்சியை ஒட்டி பிரதமர் மோடிக்கு வாழ்த்து பேனர் வைக்கப்பட்டு இருந்தது. இதில் பிரதமர் மோடியின் படத்தை மர்ம நபர்கள் கிழித்து உள்ளனர். இதையடுத்து பிளக்ஸ் பேனரை கிழித்த மர்ம நபர்களை கைது செய்ய வேண்டும் என்று மாவட்ட தலைவர் சிவசாமி தலைமையில் தளவாபாளையம் பஸ் நிறுத்தத்தில் சாலை மறியல் நடைபெற்றது.
இதில் மாவட்ட பொதுச்செயலாளர்கள் நகுலன், மோகன் தொழில் பிரிவு தலைவர் ஆர்.வி.எஸ். செல்வராஜ், இளைஞரணி தலைவர் கணேசமூர்த்தி, அக்னீஸ்வரா செல்வம், செய்தி தொடர்பாளர் மாரிமுத்து, கோபி தீனா, ஏகாம்பரம் உள்பட பலர் கலந்து கொண்டனர். பிரதமர் மோடியின் படத்தை கிழித்த சமூக விரோதிகளை கண்டித்து கோஷம் எழுப்பி சாலை மறியலில் ஈடுபட்டனர். அங்கு வந்த வேலாயுதம்பாளையம் காவல் நிலைய போலீசார், பாஜகவினரை சமாதானப்படுத்தி பிளக்ஸ் பேனரை கிழித்த நபர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என உறுதியளித்ததையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.