தரமற்ற சாலைப்பணியால் வரிப்பணம் வீணாவதாக பொதுமக்கள் அதிருப்தி
நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில், தரமற்ற சாலைப்பணியால் வரிப்பணம் வீணாவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.
HIGHLIGHTS
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில், பாதாள சாக்கடை திட்டம் தொடங்கப்பட்டு கடந்த பல ஆண்டுகளாக முடிவு பெறாத நிலையில், 90 சதவிகித சாலைகள் மக்கள் பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்த முடியாதவைகளாக மாறின. மழைக்காலங்களில், சாலைகளில் திடீர் பள்ளம் தோன்றி வாகன ஒட்டிகளை பயமுறுத்தி வந்தன.
இதனிடையே, தமிழகத்திலேயே அதிக வருவாயை ஈட்டும் நாகர்கோவில் மாநகராட்சி, மாநகராட்சி மக்கள் விரோத போக்கை கடைபிடிப்பதாக கூறி பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, நாகர்கோவில் மாநகராட்சி சார்பில், சாலைகளை சீர் செய்து புதிய சாலைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
ஆனால், மாநகராட்சி பகுதிகளில் தற்போது அமைக்கப்பட்டு வரும் சாலைகள் தரமற்ற முறையில் அமைக்கப்படுவதாகவும், பல ஆண்டுகளுக்கு ஒரு முறை அமைக்கப்படும் சாலை, ஒரு மழைக்கு கூட தாங்காது என்ற அளவில் இருப்பதாக, பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மாவட்ட நிர்வாகம், சாலைப்பணிகளை ஆய்வு செய்து தரமான சாலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.