கொரோனா விழிப்புணர்வு பயணம் மேற்கொண்ட கிராமிய கலைஞர்கள்
குமரியில் இருந்து சென்னைக்கு கிராமிய கலைஞர்கள் கொரோனா விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டனர்.
HIGHLIGHTS
கொரோனா மூன்றாவது அலை அடுத்த மாதம் அதிகரிக்கும் என மருத்துவ வல்லுனர்கள் தெரிவித்துள்ள நிலையில் அதனை தடுக்கும் வகையில் தடுப்பு நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்தி உள்ளது.
இதனிடையே மாநில அளவில் பொதுமக்களிடையே கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், முக கவசம் அணிவது மற்றும் கொரோனா தடுப்பூசி போடுவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு கிராமிய கலைஞர்கள் விழிப்புணர்வு இருசக்கர வாகன பயணம் மேற்கொண்டனர்.
30 நாட்கள் தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்று தொடங்கிய விழிப்புணர்வு இருசக்கர வாகன பிரசார பயணத்தை நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அரவிந்த் தொடங்கி வைத்தார்.
முன்னதாக மேஜிக் ஷோ மற்றும் கிராமிய பாடல்களுடன் தொடங்கிய இந்த பயணமானது திருநெல்வேலி, தேனி, திண்டுக்கல், கரூர் உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் வழியாக சென்னை சென்று அங்கிருந்து பாண்டிச்சேரி, கடலூர், மயிலாடுதுறை, வழியாக அடுத்த மாதம் 17ம் தேதி மீண்டும் கன்னியாகுமரி வந்தடைகிறது.