கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி பூதலிங்க சுவாமி கோவில் தேரோட்டம்
கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி பூதலிங்க சுவாமி கோவில் தேர் திருவிழா அரோகரா கோஷம் முழங்க விமரிசையாக நடைபெற்றது.
HIGHLIGHTS
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பூதப்பாண்டி பகுதியில் அமைந்துள்ள பூதலிங்கசுவாமி கோவிலில் மன்னர் கால பாரம்பரியமும், பிரசித்தியும் பெற்ற இந்த கோவிலில் ஆண்டுதோறும் தை மாதம் தைபெரும் திருவிழா நடைபெறுவதோடு, திருத்தேர் உற்சவமும் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டிற்கான தைபெரும் திருவிழா கடந்த 9 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்த நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கோவிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதோடு தேர் திருவிழா நடத்தவும் அனுமதி மறுக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து பல்வேறு இந்து இயக்கங்கள் மற்றும் பூதப்பாண்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் இணைந்து பல்வேறு கட்ட போராட்டங்களை மேற்கொண்டனர்.
இதனை தொடர்ந்து திருவிழாவை நடத்த தடை இல்லை என மாவட்ட நிர்வாகம் அறிவித்த நிலையில் இன்று பூதலிங்க சுவாமி கோவில் பாரம்பரிய தேர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
முன்னதாக பல்வேறு பூஜைகள் மற்றும் வழிபாடுகளுக்கு பின்னர் விநாயகர், அம்பாள் மற்றும் சுவாமிகள் தேரில் எழுந்தருளினர். தொடர்ந்து விநாயகர் தேரை சிறுவர்களும், அம்பாள் தேரை பெண்களும், சுவாமி தேரை அனைத்து தரப்பினரும் இழுத்தனர்.
முன்னதாக முன்னாள் அமைச்சரும் அ.தி.மு.க கன்னியாகுமரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான தளவாய் சுந்தரம், தமிழக தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மனோதங்கராஜ் உள்ளிட்டோர் திருத்தேரை வடம்பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர்.
அதன்படி நடைபெற்ற தேர் திருவிழாவில் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அரோகரா கோஷம் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்தனர்.