குமரியில் மின்சாரம் தாக்கி குரங்கு பலத்த காயம்: வனத்துறையினர் மீட்டு சிகிச்சை
குமரியில் மின்சாரம் தாக்கி பலத்த காயம் அடைந்த குரங்கை மீட்ட வனத்துறையினர் சிகிச்சை அளித்தனர்.
HIGHLIGHTS
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை பண்டாரபுரம் அருகே நான்கு வழிச்சாலையில் மந்தி வகையை சார்ந்த குரங்கானது மின்சாரம் தாக்கி கீழே மயங்கிய நிலையில் கிடந்தது. மேலும் இக்குரங்கின் கால் பகுதியானது மிகவும் பாதிக்கப்பட்டிருந்தது, இதனை அவ்வழியாக வந்தவர்கள் பார்து பூதப்பாண்டி வனச்சரக அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
வனசரகர் திலீபன் உத்தரவின் பேரில் வனக்காப்பாளர் கிருஷ்ணமூர்த்தி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மயங்கிய நிலையில் கிடந்த மந்தி குரங்கினை பத்திரமாக மீட்டார். மேலும் தோவளை அருகே உள்ள ஜீவ காருண்ய விலங்குகள் அறக்கட்டளைக்கு குரங்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
தொடர்ந்து ஆரல்வாய்மொழி வன அலுவலகத்தில் குரங்கு பாதுகாக்கப்பட்டு வரும் நிலையில் சிகிச்சைக்கு பின்னர் புலியூர்குறிச்சியில் உள்ள உதயகிரி உயிரியல் பூங்காவில் குரங்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு விடப்படும் என வனச்சரகம் தெரிவித்து உள்ளது.