இந்து மகாசபா மாநில தலைவர் கைது: உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதி
குமரியில் இந்து மகாசபா மாநில தலைவர் கைது, உடல் நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
HIGHLIGHTS
கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்ற கோவில் திருவிழா ஒன்றில் பேசிய அகில பாரத இந்து மகா சபா தேசிய செயலாளரும், தமிழ் மாநில தலைவருமான தா.பாலசுப்ரமணியம் இஸ்லாமியர்களுக்கு எதிராக கடும் சொற்களால் பேசினார்.
இது குறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்புணர்வை தூண்டும் பேச்சு தொடர்பாக இந்து மகா சபா மாநில தலைவர் தா.பாலசுப்ரமணியனை கைது செய்தனர்.
நாகர்கோவில் அருகே ஈத்தாமொழி பகுதியில் உள்ள அவரது வீட்டில் கைது செய்த போலீசார், அவரை நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்போது அவருக்கு உடல்நலகுறைவு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து போலீசாரின் கஸ்டடியில், அவர் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே பாலசுப்ரமணியம் கைது செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து நீதிமன்றம், மருத்துவ கல்லூரி மருத்துவமனை பகுதிகளில் ஏராளமான இந்து மகாசபா தொண்டர்கள் குவிந்ததால் பதட்டம் நிலவியது. இதனைத் தொடர்ந்து ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.