ரத்ன அங்கியில் வரதராஜபெருமாள் பக்தர்களுக்கு சேவை சாதித்தார்
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் லெட்சுமி குமார தாததேசிகன் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு உற்சவர் தேவராஜ சுவாமி ரத்தின அங்கியில் அருள்பாலித்தார்.
HIGHLIGHTS
ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்றதும்,40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் அத்திவரதர் பெரு விழாவிற்கும் பெயர் பெற்றது காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் திருக்கோயில்.
இக்கோயிலில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் கார்த்திகை மாதம் அனுஷ நட்சத்திரத்தில் லட்சுமி குமார தாததேசிகன் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு உற்சவர் தேவராஜசுவாமிக்கு ரத்ன அங்கி சாற்றப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.
இதன்படி இன்று உற்சவர் தேவராஜசுவாமி ரத்ன அங்கியும்,பாண்டியன் கொண்டையும் அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.ஸ்ரீதேவி,பூதேவியருடன் உற்சவர் தேவராஜசுவாமி மற்றும் பெருந்தேவித்தாயார் ஆகியோர் ஆலயத்திலிருந்து கோயில் வளாகத்தில் உள்ள தேசிகன் சந்நிதிக்கு எழுந்தருளினர்.
அங்கு தரிசனத் தாம்பூல மரியாதை செய்விக்கப்பட்டு சிறப்பு தீபாராதனைகளும் நடந்தன.இதனைத்தொடர்ந்து கோயில் வளாகத்தில் உலா வந்தும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
ரத்ன அங்கி சேவைக் காட்சியைக் காண தமிழகம் மட்டுமில்லாது ஆந்திரா, கர்நாடகா ஆகிய பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
சிறப்பு நாதசுவர இன்னிசைக் கச்சேரியும் நடைபெற்றது.பின்னர் மீண்டும் தேசிகன் சந்நிதிக்கு எழுந்தருளி அங்கு சிறப்பு அபிஷேகம்,தீபாராதனை ஆகியன நடைபெற்றது.
மாலையில் சிறப்பு அலங்காரத்துடன் மீண்டும் கோயில் வளாகத்தில் உற்சவர் தேவராஜசுவாமியும்,பெருந்தேவித் தாயாரும் உலா வந்தனர்.ஏற்பாடுகளை திருக்கோயில் செயல் அலுவலர் ந.தியாகராஜன்,கோயில் மணியம் கிருஷ்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.