இரண்டாம் நாள் பிரம்மோற்சவ விழாவில் ஹம்ச வாகனத்தில் வரதராஜ பெருமாள்
வைகாசி மாத பிரம்மோற்சவ விழாவில் இரண்டாம் நாள் அதிகாலை அம்ச வாகனத்தில் வரதராஜர் எழுந்தருளி மாநகரில் வீதி உலா நடைபெற்றது.
HIGHLIGHTS
அத்திவரதர் புகழ்பெற்ற ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயிலின் இந்தாண்டு வைகாசி மாத பிரம்மோற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் துவங்கி வரும் ஒன்பதாம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்நாளில் வரதராஜ பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் பல்வேறு வாகனங்களில் காலை மற்றும் மாலை வேலைகளில் காஞ்சி மாநகர் வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.
அவ்வகையில் நேற்று அதிகாலை 2 மணி அளவில் கொடியேற்றம் நடைபெற்று அதனைத் தொடர்ந்து தங்க சக்கர வாகனத்தில் வீதி உலா வந்தார்.
முதல் நாள் மாலை உற்சவத்தில் தங்க சிம்ம வாகனத்தில் வரதராஜ பெருமாள் எழுந்தருளி சின்ன காஞ்சிபுரம், ரங்கசாமி குளம் , வள்ளல் பச்சையப்பன் தெரு , பேருந்து நிலையம், நான்கு ராஜ வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
வைகாசி பிரம்மோற்சவத்தின் 2-வது நாள் உற்சவத்தில் வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து, திருவாபுரணங்கள், மல்லிகைப்பூ, செண்பகப்பூ, மலர் மாலைகள் அணிவித்து, வெள்ளியால் ஆன அழகிய அன்னப்பறவை( ஹம்ச ) வாகனத்தில் எழுந்தருளச் செய்தனர்.
பின்னர் அழகிய அன்னப் பறவை வாகனத்தில் எழுந்தருளிய வரதராஜ பெருமாள், மேளதாள பேண்டு வாத்தியங்கள் முழங்க அதிகாலை வேளையில் காஞ்சிபுரம் நகரின் முக்கிய வீதிகளில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
அழகிய அன்ன வாகனத்தில் அதிகாலை நேரத்தில் வீதி உலா வந்த வரதராஜ பெருமாளை வழிநெடிகிலும் திரளான பக்தர்கள் திரண்டு வந்து காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வணங்கி வழிபட்டு சென்றனர்.