தேர்தல் ஆணையம் ஒரு நாடக கம்பெனி; அதை சீர்த்திருத்தணும்: சீமான் பேச்சு
தேர்தல் ஆணையம் ஒரு நாடக கம்பெனி; அதைத்தான் முதலில் சீர்திருத்த வேண்டும் என, காஞ்சிபுரத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.
HIGHLIGHTS
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெறும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகப்படுத்தி, ஆதரித்து வாக்களிக்க கோரினார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் சீமான் பேசியதாவது:
ஊரக உள்ளாட்சித் தேர்தல் அரசியல் என்பது சாதி, மதம், சாராயம், கவர்ச்சி, பணம் ஆகிய ஐந்து தூண்களால் கட்டமைக்கப்பட்டுள்ளது. எங்களால் சாதி மதம் சாராயம் என தாண்டினாலும், பணத்தை தாண்ட இயலவில்லை. எம்பி எம்எல்ஏக்களை விட அதிக அளவில் வருமானம் ஈட்டும் தொழிலாக உள்ளாட்சி பதவி உள்ளது.
விவசாயக்கடன் தள்ளுபடி, நகைக்கடன் தள்ளுபடி எனும் கூறிவரும் இரு கட்சிகளையும் நாம் புறந்தள்ள வேண்டும். ஒரேநாடு ஒரே ரேஷன் கார்டு, ஒரே ஜிஎஸ்டி எனக்கூறும் மத்திய அரசு, உள்ளாட்சித் தேர்தலை கூட, ஒரே கட்டமாக நடத்த முடியாத நிலையில் உள்ளது.
பறக்கும் படையினர் என ஒன்றை அமைத்து, சாலையில் செல்லும் அப்பாவி மக்களிடம் பணத்தைப் பறிக்கும் நிலையில், அரசியல் கட்சிகள் தங்கள் பகுதிகளில் பண மழை பொழிந்து வருகின்றனர். தேர்தல் ஆணையம் ஒரு நாடகக் கம்பெனி போல் உள்ளது. ஆகவே, அடிப்படையில் தேர்தல் ஆணையத்தை சீர்திருத்த வேண்டிய சூழலில், முதல் கட்டத்தில் நாம் உள்ளோம். இவ்வாறு சீமான் பேசினார்.
இந்நிகழ்வில், காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் சால்டின் சாமுவேல், மாவட்ட தலைவர் பிரகதீஸ்வரன், மாவட்ட பொருளாளர் குமரேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.