காஞ்சிபுரம் மாவட்ட மனுநீதி நாள் முகாமில் ரூ.3.25 கோடி நலத்திட்ட உதவிகள்
காஞ்சிபுரம் அடுத்த வையாவூர் கிராம ஊராட்சியில் நடந்த மனு நீதி நாள் முகாமில் ரூ.3.25 கோடி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
HIGHLIGHTS
காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் வட்டம், வையாவூர் கிராமத்தில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் 366 பயனாளிகளுக்கு ரூ.3,25,80,000/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்த்தி, வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பேசியதாவது:-
நமது மாவட்டத்தில் இயங்கி வரும் வருவாய் துறை, ஊரக வளர்ச்சித்துறை, மாற்றுத்திறனாளி நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, தொழில் துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத் துறை, கூட்டுறவுத்துறை, சமூக நலன் மற்றும் பாதுகாப்புத்துறை, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் உள்ளிட்ட துறைகளின் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் விவரங்கள் குறித்து துறை சார்ந்த உயர் அலுவலர்கள் பொது மக்களிடம் எடுத்துரைத்தனர்.
இத்திட்டங்கள் குறித்த விவரங்கள் அனைத்தும் இங்கு அமைக்கப்பட்டு உள்ள துறை சார்ந்த அரங்குகளில் பொது மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் திட்டங்களின் விவரங்கள் பற்றிய சந்தேகம் ஏதேனும் இருப்பின் துறை சார்ந்த அலுவலர்களிடம் கேட்டறிந்து தங்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தி கொள்ளலாம். இன்று மனுநீதி நாள் முகாம் நடைபெறுவதை முன்னிட்டு, 23.11.2022 முதல் 30.11.2022 வரை வருவாய் கோட்டாட்சியர் அவர்கள் முகாமிட்டு பொது மக்களிடம் மனுக்கள் பெறப்பட்டது.
அதனை முறையாக பரிசீலித்து, பெறப்பட்ட மனுக்களில் மாற்றுத்திறனாளி நலத்துறை மூலம் தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டை 3 நபர்களுக்கும், மாற்றுத் திறனாளிக்களுக்கான உபகரணங்கள் 3 நபர்களுக்கும், வருவாய்துறை மூலம் அடிப்படை தேவைகளான இலவச வீட்டுமனைப் பட்டா 197 நபர்களுக்கும், முதியோர் ஓய்வூதியம் 25 நபர்களுக்கும், கிராம கணக்கில் மாற்றம் 35 நபர்களுக்கும், முழுபுலம் மற்றும் உட்பிரிவு பட்டா 11 நபர்களுக்கும், ஊரக வளர்ச்சிதுறை மூலம் மகளிர் சுயஉதவி வங்கிக் கடன் 3 நபர்களுக்கும், மாட்டுக்கொட்டகை 24 நபர்களுக்கும், ஆட்டுக்கொட்டகை 24 நபர்களுக்கும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் விலையில்லா இலவச தையல் இயந்திரம்3 நபர்களுக்கும், தொழில்துறை மூலம் தொழில்கடன் 4 நபர்களுக்கும், வேளாண்மை துறை மூலம் இடுபொருட்கள் 5 நபர்களுக்கும், தோட்டகலைத் துறை மூலம் நாற்றுகள் 3 நபர்களுக்கும், கூட்டுறவுதுறை மூலம் பயிர்க்கடன் 11 நபர்களுக்கும், சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் ஊட்டச்சத்து பெட்டகம் 3 நபர்களுக்கும், தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் பயனாளிகள் தாமாக வீடு கட்டும் திட்டம் 12 நபர்களுக்கும் வழங்கப்பட்டது.
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி பேசினார்.
இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன், உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர், மாவட்ட வருவாய் அலுவலர் சிவருத்ரய்யா, வருவாய் கோட்டாட்சியர் கனிமொழி, வாலாஜாபாத் ஒன்றியக் குழுத்தலைவர் தேவேந்திரன், வட்டாட்சியர் பிரகாஷ், ஊராட்சி மன்ற தலைவர் ஜெயலட்சுமி நீலகண்டன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.