/* */

சூரிய கிரகணத்தை பயன்படுத்தி செவிலிமேடு கைலாசநாதர் கோயிலில் கொள்ளை முயற்சி!

சூரிய கிரகணத்தை பயன்படுத்தி பழமை வாய்ந்த செவிலிமேடு கைலாசநாதர் திருக்கோயில் பாதுகாப்புக்காக வைக்கப்பட்ட சிசிடிவி கேமராக்கள் உடைத்துக் கொள்ளை முயற்சி நடந்தது.

HIGHLIGHTS

சூரிய கிரகணத்தை பயன்படுத்தி செவிலிமேடு கைலாசநாதர் கோயிலில் கொள்ளை முயற்சி!
X

செவிலிமேடு கைலாசநாதர் கோயிலில் நடைபெற்ற கொள்ளை முயற்சி குறித்த சிசிடிவி கேமரா காட்சிகளை காவல் துணை ஆய்வாளர் துளசி ஆய்வு செய்தார்.

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட செவிலிமேடு பிராமணர் தெருவில் அமைந்துள்ளது 1000 ஆண்டுகள் பழமையான அருள்மிகு காமாட்சி அம்மன் உடனுறை ஸ்ரீ கிழக்கு கைலாசநாதர் திருக்கோயில். இந்தத் திருக்கோயில் கடந்த 2018 ஆம் ஆண்டு புனரமைக்கப்பட்டது. கோயிலில் சிவகாமி அம்பாள், நடன சுந்தரர், நடராஜர், முருகர், பிரதோஷ நாயகர் மற்றும் நாயகி உள்ளிட்ட ஆறு பஞ்சலோக சிலைகளும், விநாயகர், முருகர், வள்ளி, தெய்வானை என மொத்தம் பத்து சுவாமி சிலைகளும் உள்ளன.

திருக்கோயில் புனரமைக்கப்பட்ட போது கிடைக்கப்பெற்ற கல் சிலைகள் உள்ளிட்ட எட்டு சிலைகளுக்கு தனித் தனி சன்னதிகள் அமைத்து நாள்தோறும் ஆகம விதிகளின்படி பூஜைகள் நடைபெற்று வருகிறது.மேலும், இந்தத் திருக்கோயில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்து வருகிறது. திருக்கோயில் செயலாளர் கோயிலின் தக்காரக இருந்து, அந்தக் கிராம பெரியவர்களின் உதவியுடன் செயல்பட்டு வருகிறார். சூரிய கிரகணத்தை முன்னிட்டு நேற்று உச்சிக் கால பூஜைக்கு பிறகு கோயிலில் நடை சாத்தப்பட்டது.

இந்நிலையில் இன்று காலை 8 மணி அளவில் பக்தர்கள் கோயிலை தரிசிக்க வந்தபோது கோயிலின் கதவில் தொங்கிய பூட்டுகள் உடைக்கப்பட்ட நிலையில் காணப்பட்டதைக் கண்ட பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து உடனடியாக அந்தப் பகுதி மக்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.திருக்கோயில் பராமரிப்பு குழுவை சேர்ந்தவர்கள் உடனடியாக திருக்கோயிலுக்குள் சென்று பார்த்தபோது திருக்கோயிலின் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டிருந்த 8 சிசிடிவி கேமராக்களில் ஒரு கேமரா தவிர அனைத்தும் உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. மேலும், கோயிலில் பூட்டப்பட்டிருந்த 11 பூட்டுகளும் உடைக்கப்பட்டு கொள்ளையடிக்க முயன்றள்ளதும் தெரியவந்தது.

முதல் இரண்டு கேமராக்களை முன்பக்கமாக நின்று உடைத்த கொள்ளையன், அதன் பிறகு சுதாரித்துக் கொண்டு மற்ற கேமராக்களை பின்பக்கமாக சென்று உடைத்துள்ளார். தொடர்ந்து, கோயில் முழுவதும் சென்ற அந்த நபர் பணம் மற்றும் நகை எங்கு உள்ளது என தேடி உள்ளான்.கோயிலில் உள்ளே இருந்த இரும்பு பொருட்களைக் கொண்டு பீரோ கதவுகளையும் உடைக்க முயற்சித்துள்ளான்.

கொள்ளையனின் முயற்சிகள் அனைத்தும் பலனளிக்காத நிலையில், அங்கு பக்தர்கள் காணிக்கையாக அளித்த சில்லறை காசுகளை மட்டும் திருடிக் கொண்டு வெளியேறி சென்றுள்ளார். கோயிலின் ஒரு பகுதியில் இருந்த ஏணியை பயன்படுத்தி மதில் சுவர் ஏறி குதித்து அவன் தப்பியுள்ளது சிசிடிவி கட்சியில் பதிவாகியுள்ளது.இதுகுறித்து காஞ்சிபுரம் தாலுகா காவல்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் அளித்தனர். அன் பேரில், காவல்துறை துணை ஆய்வாளர் துளசி, செயல் அலுவலர் பூவழகி ஆகியோர் சம்பவ இடத்தை ஆராய்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் கோயிலில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சியில் உள்ள நபரின் முகத்தை அடையாளம் கண்டு காவல்துறையினர் தேடுதல் வேட்டையில் இறங்கி உள்ளனர். கோவிலில் இருந்த ஆறு பஞ்சலோக சிலைகள் உட்பட 10 சிலைகள் அனைத்தும் பாதுகாப்பாக உள்ளதாக கோயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு தான் படப்பை அருகில் கோயில் கொள்ளை அடிக்க வந்தபோது அலாரம் ஒலித்ததால் கொள்ளையர்கள் தப்பி ஓடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது. தற்போது சூரிய கிரகணத்தை ஒட்டி கோயில் நடை சாத்தப்பட்ட நிலையில் மறுநாள்தான் கோயில் நடை திறக்கப்படும் என்பதை அறிந்து கோயிலுக்குள் திருட முயற்சி நடைபெற்றுள்ளது அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 26 Oct 2022 6:46 AM GMT

Related News