காஞ்சிபுரம் மாவட்டத்தில் மீண்டும் மழை: அச்சத்தில் பொதுமக்கள்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உத்திரமேரூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் மழை பெய்து வருகிறது.
HIGHLIGHTS
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலமாகவே வடகிழக்கு பருவமழை மற்றும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் என உருவாகி வரலாறு காணாத மழை பெய்தது. இதன் காரணமாக பாலாறு, செய்யாறு ஆகியவற்றில் தொடர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பொது போக்குவரத்து பல இடங்களில் முடங்கியது.
இந்த பாதிப்பிலிருந்து இன்னும் மீளாத பொதுமக்களுக்கு, மீண்டும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு முதல் மாவட்டத்தின் பல பகுதிகளில் அவ்வப்போது கனமழை மற்றும் தொடர் சாரல் மழை பொழிகிறது.
உத்திரமேரூர் பகுதிகளில் நேற்று இரவிலிருந்து காலை 6 மணி வரை 32மிமீ மழை பெய்து உள்ளது. இந்நிலையில் தற்போது வரை மாவட்டத்தில் பல பகுதிகளில் மழை தொடர்ந்து பெய்து வருவதால் பொதுமக்கள் மீண்டும் அச்சமடைந்துள்ளனர்.
ஏற்கனவே நீர்நிலைகள் நிரம்பி உபரி நீர் வெளியேறி தற்போது குறைந்த நிலையில் மீண்டும் மழையா என அச்சத்தில் உள்ளனர்.