காஞ்சிபுரம்: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஆர்வம் காட்டாத இளைஞர்கள்
காஞ்சிபுரத்தில் இன்று நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்த சிறப்பு முகாம்களில் இளைஞர்கள் பெயர் சேர்க்க ஆர்வம் காட்டவில்லை.
HIGHLIGHTS
இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணைப்படி 2023-ம் ஆண்டிற்கான வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 9-ந் தேதி தமிழகம் முழுவதும் வெளியிடப்பட்டது.
அன்று முதல் டிசம்பர் மாதம் 8-ந் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்கம் செய்ய மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ள விண்ணப்பங்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்படுகின்றன.
மேலும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. அந்த வகையில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தமிழகம் முழுவதும் நடைபெறும் என தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்தது
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1394 வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் வாக்காளர்கள் கலந்து கொண்டு விண்ணப்பிக்கலாம். முகாம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இதேபோல் வருகிற 26, 27-ந் தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளதாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி அறிவித்திருந்தார்.
பொதுமக்கள் இந்த வாய்ப்பினை நன்கு பயன்படுத்திக்கொள்ளலாம் என அறிவித்த நிலையில் நேற்று நடைபெற்றது. இதில் குறைந்த நபர்களே தங்கள் விண்ணப்பங்களை அளித்திருந்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் கனமழை பெய்த நிலையில் நேற்று நடைபெற்ற முகாமில் வந்த வாக்காளர்கள் இன்று மழை இல்லாத நிலையில் வாக்கு சாவடி மையங்களுக்கு தங்கள் தேவைகளுக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆறுக்கும் மேற்பட்ட வாக்கு சாவடி பூத் உள்ள நிலையில் அங்கு பணிபுரிய இரு அலுவலர்கள் மட்டுமே வந்திருந்தனர் தி.மு.க. சார்பில் மாமன்ற உறுப்பினர் அன்பழகன் மற்றும் அவருடன் இருவர் மட்டுமே இருந்தனர்.
அ.தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சி பூத் லெவல் முகவர்கள் யாரும் இதில் ஆர்வம் காட்டவில்லை. அவர்கள் தான் ஆர்வம் இல்லை என்றாலும் அரசு அலுவலர்கள் 11 மணி வரை வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெற்ற பல இடத்திற்கு வரவில்லை என்பதும் நேரில் காணப்பட்டது.
அலுவலர் எண்ணிக்கை குறித்து கேட்டபோது மற்ற அலுவலர்கள் பல காரணங்களை தெரிவித்தனர். பல வாக்கு சாவடி மையங்களில் குறைந்த அலுவலர்கள் பல பூத் பணிகளையும் இணைந்து பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
வாக்காளர் சிறப்பு முகாம் குறித்து கடந்த ஒரு மாத காலமாகவே பத்திரிகை செய்திகள் , தேர்தல் ஆணைய விளம்பரம் என பல விழிப்புணர்வுகள் செய்தும் மழை காரணமாக பிசுபிசுத்தது என கட்சியினர் தெரிவித்தாலும் வாக்காளர்களுக்கு இது மிக முக்கியமானது என்பது தெரியவில்லை.
தற்போது தேர்தல் ஆணையம் 17 வயது நிரம்பியவர்கள் தங்கள் விண்ணப்பங்களை தற்போது அளித்தால் 18 வயது வரும் நிலையில் தானாகவே வாக்காளராக வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள் என தெரிவித்தும் இளைஞர்கள் ஆர்வம் காட்டவில்லை.